Politics

அத்வானியை தொடர்ந்து 3 பேருக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதுகள் - யார் அவர்கள் ?

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதிக்கும் ஒருவருக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றுதான் 'பாரத ரத்னா'. குறிப்பாக கலை, அரசியல், இலக்கியம், விளையாட்டு, பொது சேவை, அறிவியல் உள்ளிட்ட பல துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்படுவர். அந்த வகையில் இந்த ஆண்டு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் முன்னாள் பிரதமர்களும் இடம்பெற்றுள்ளனர். முன்னதாக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான LK அத்வானி, பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூர் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேருக்கு இந்த விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

எம்.எஸ்.சுவாமிநாதன்

அதில் முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நரசிம்ம ராவ், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் தென்னிந்தியாவை சேர்ந்தவர். எம்.எஸ்.சுவாமிநாதன் கடந்த ஆண்டு மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.