Politics

அமலாக்கத்துறையும் ஊழலும் : பிரதமர் மோடி நாடாளுமன்ற உரையின் உண்மைத் தன்மை என்ன?

நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாடினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “இந்திய புலனாய்வு முகமைகள் ஊழலுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாங்கள் ஊழல் செய்பவர்களிடம் இருந்து பணங்களை கைப்பற்றி ஏழை மக்களுக்கு பயன்படுத்துகிறோம்,” என்று கூறியுள்ளார்.

ஆனால் உண்மையில் ஊழல் பணத்தை கைப்பற்றி ஏழை மக்களுக்குதான் ஒன்றிய பா.ஜ.க அரசு பயன்படுத்துகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அண்மையில் வெளியான தரவுகளின்படி பார்த்தால், இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பான வழியில் பல தனியார் நிறுவனங்கள் அசுர வளர்ச்சியடைந்துள்ளன என்று தெரியவந்துள்ளது.

அதிலும் குறிப்பாக, அதானி நிறுவனங்களுக்கு எதிராக உலக அளவில் ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனால் பா.ஜ.க அரசால் அதானி நிறுவனங்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது.

அதேநேரம் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு முகமைகள் எதிர்கட்சி தலைவர்களை குறிவைக்கப் பயன்படுத்தப்படுகிறதே தவிர, ஊழலற்ற இந்தியாவை நிறுவுவதற்கு பயன்படுத்துவது கிடையாது. இந்த உண்மையை ஊழல் புலனாய்வு குறியீடு - 2023 (Corruption Perception Index - 2023) வெளிப்படுத்தியிருக்கிறது.

ஊழல் குறித்து 180 நாடுகளில் ஊழல் புலனாய்வு குறியீடு (CPI) ஆய்வு நடத்தியுள்ளது. அதில் இந்தியா 93 ஆவது இடத்தை பெற்றுள்ளது. ஊழல் புலனாய்வு எப்படி கணக்கிடப் படுகிறது என்றால், 0 - என்றால் அதிகப்படியான ஊழல் நிகழ்கிற நாடு என்று பொருள். 100 - என்றால் ஊழல் அற்ற நாடு என்று பொருள். இந்த கணக்கீட்டின்படி இந்தியா பெற்ற மதிப்பெண் 39. கடந்த 2022-ல் 40 ஆக இருந்த மதிப்பெண், தற்போது 39 ஆக குறைந்திருப்பது, ஊழல் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் ஊழல் குறையவில்லை என ஆய்வுகள் சொல்லும்போது, ஊழலை தடுத்து அந்த பணத்தை கைப்பற்றி ஏழை மக்களுக்கு பயன்படுத்துகிறோம் என்று பிரதமர் மோடியின் பேச்சில் மட்டும் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்ற கேள்வி சாமானிய மக்களுக்கு எழத்தானே செய்யும்.

Also Read: மோடி ஆட்சியில் பாகிஸ்தானை விட மோசமான இந்தியாவின் நிலை : ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய முரசொலி !