Politics

நிதி பங்கீட்டில் வஞ்சனை: வாக்குகளை கொண்டும் மக்களை பிரிக்கும் ஒன்றிய அரசு!

2023-ம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட் தாக்கலுக்கு பின், பெருநகர மும்பை மாநகராட்சி, உள்கட்டமைப்பு நிதி வழங்கல் ஆணை பிறப்பித்தது. இதன் மூலம் மும்பை மாநகராட்சியின் 36 தொகுதிகளுக்கு நிதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆணையின்படி, மும்பை மாநகரின் 36 சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்களின் தொகுதி உள்கட்டமைப்பு பணிகளுக்கான நிதி பெற, மூவர் குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டும். மூவர் குழுவில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் இரண்டு பொறுப்பு அமைச்சர்கள் (Guardian Ministers) மங்கள் பிரபாத் லோதா (26 தொகுதிகள்), தீபக் கேசார்கர் (10 தொகுதிகள்) ஆகியோர் பணியமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது என்றும் எதிர்க்கட்சி கூட்டணி உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மும்பை நகரின் 36 தொகுதிகளில், பாஜக கூட்டணியின் 21 உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டு, உடனடி நிதி வழங்கப்படுகிறது. இந்தியா கூட்டணியின் 15 உறுப்பினர்களில் 11 பேர், நிதிக்கான கோரிக்கை விடுத்தும் நிதி ஒதுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Indian Express-ன் புலனாய்வு கட்டுரையில், ரூ.500 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அதில் ஒரு ரூபாய் கூட இந்தியா கூட்டணி உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தாராவி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ்காரருமான வர்ஷா, “கடந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், நான் நிதி கோரி அனுப்பிய கடிதங்களுக்கு இதுவரை பதிலில்லை. ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படவும் இல்லை,” என தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் சட்டப்படி (RTI), பாஜக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த சில தினங்களில் நிதி ஒதுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இது போன்ற ஓரவஞ்சனை நடந்துள்ளதா என்று மங்கள் பிரபாத் லோதாவிடம் கேட்கப்பட்டபோது, அவர் “இதுவரை நாங்கள் எந்த கோரிக்கையையும் கிடப்பில் போடவில்லை,” என கூறியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் அபு அஸ்மியும், அவரின் தொகுதிக்கான நிதிக்காக நேரில் சென்று கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு மங்கள் லோதா, “நிதி வழங்கப்படும்,” என மட்டும் கூறியுள்ளார். ஆனால் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என்று அபு அஸ்மி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இந்திய மக்களை மதமாகவும் சாதியாகவும் வர்க்கமாகவும் துண்டாடி அரசியல் செய்து வரும் பாஜக, வாக்குகளை வைத்தும் இந்தியர்களை துண்டாடும் போக்கு இதில் அம்பலமாகியுள்ளது.

Also Read: தீவிரமடையும் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்: பாஜக அலுவலகத்திற்கு தீ வைப்பு - தவிக்கும் ஏக்நாத் ஷிண்டே!