Politics
கோடி மதிப்பிலான 126 மரங்கள் கடத்தப்பட்ட வழக்கு : பாஜக எம்.பியின் சகோதரரை அதிரடியாக கைது செய்த போலிஸ் !
கர்நாடக மாநிலத்தின் மைசூரு தொகுதியின் எம்.பி-யாக இருப்பவர்தான் பிரதாப் சிம்ஹா. கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜ.கவில் இணைந்த இவருக்கு, உடனடியாக பா.ஜ.க தலைமை இளைஞர் பிரிவு தலைவர் பதவியை வழங்கியது. அப்போது (2014-ம் ஆண்டு) நடைபெற்ற மக்களவை தேர்தலில் மைசூர் தொகுதியில் போட்டியிட்டு 3200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து 2019-ல் அதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்று தற்போதும் எம்.பியாக உள்ளார். இவர் அடிக்கடி காங்கிரஸ் குறித்து அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசி வந்துள்ளார். அதோடு சில சர்ச்சைகளில் அவ்வப்போது சிக்கி வருகிறார். அந்த வகையில் கடந்த டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது, மர்ம நபர்கள் மக்களவையில் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
அதோடு பல்வேறு கோஷங்களை எழுப்பிய அவர்கள், புகை குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த நபர்களுக்கு விசிட்டர் பாஸ் என்று சொல்லப்படும் பார்வையாளர்கள் சீட்டை, மைசூரு எம்.பி பிரதாப் சிம்ஹா கொடுத்துள்ளார். இந்த சர்ச்சையில் சிக்கியுள்ள பிரதாப் சிம்ஹா மீது விசாரணை நடத்த வேண்டுமென்றும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 145-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் அந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எனினும் தற்போது வரை பிரதாப் சிம்ஹா மீது ஒன்றிய பாஜக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது மரகடத்தல் விவகாரத்தில் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதாப் சிம்ஹாவின் சகோதரர் விக்ரம் சிம்ஹா. இவர் கர்நாடகத்தில் அமைந்துள்ள ஹாசன் பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டி கடத்தியதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் புகார் எழுந்தது. சுமார் 50 - 60 ஆண்டுகளான மரங்களை வெட்டி வேறு பகுதிக்கு கடத்தியுள்ளார். இதனடிப்படையில் இவரை தேடி வந்த போலீசார், நேற்று பெங்களுருவில் பதுங்கியிருந்த இவரை அதிரடியாக கைது செய்தது.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட விக்ரம் சிம்ஹாவை, மத்திய குற்றப்பிரிவின் முறைப்படுத்தப்பட்ட குற்றத்தடுப்பு படையினர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் இவர் மீதான குற்றங்களுக்கான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த த.வெ.க மருத்துவ அணி நிர்வாகி : வலுக்கும் கண்டனங்கள்!
-
த.வெ.க ஆட்சியில் டெண்டர் ஊழல் அம்பலம் : நடந்தது என்ன?
-
”கோயபல்ஸ் உத்தியை பின்பற்றும் தவெக.. பொய் மேல் பொய்.. போலிக்கே போலி.. தவெக-வின் முரட்டு உருட்டுகள்”
-
கரூர் விவகாரம் - உண்மை வெளிவந்துவிடும் என்பதால் காவல்துறை அதிகாரிகளை மாற்றிய விஜய் : டி.கே.எஸ் இளங்கோவன்!
-
கலைஞரின் 103 ஆம் பிறந்த நாள் - 4 மாநிலங்களில் 103 பரப்புரைக் கூட்டங்கள் : ஆசிரியர் கி.வீரமணி அறிவிப்பு!