Politics
”56 அங்குல மார்பு என பெருமை பேசும் மோடியால் இதை கூட தடுக்கமுடியவில்லை” - தெலங்கானா முதல்வர் விமர்சனம் !
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தொடங்கி நேற்றுடன் 139-வது வருடம் ஆகிறது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி நிறுவன நாள் இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ரேவந்த் ரெட்டி, மோடியின் மருந்துக்கும் காலாவதி உள்ளது என்று விமர்சித்தார். இதுகுறித்து ரேவந்த் ரெட்டி பேசியதாவது, "56 அங்குல மார்பு கொண்டவர் என்று பிரதமர் மோடி எப்போதும் தன்னைப் பற்றி பெருமையாக பேசுவார். ஆனால், மக்களவைக்குள் ஒரு சாமானியர் நுழைந்து சலசலப்பை ஏற்படுத்தியபோது, அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
சாமானியர் ஒருவர் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதை பிரதமர் மோடியால் எப்படி தடுக்க முடியவில்லையோ, அதேபோல் நாளை வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் காங்கிரஸ் கொடி ஏற்றுவதையும் தடுக்க முடியாது. 'இரட்டை இன்ஜின் ஆட்சி' என்று பாஜக அழைப்பது உண்மையில் "அதானி-பிரதானி (அதானி மற்றும் பிரதமர்). இந்த முறை மணிப்பூரில் இருந்து மும்பை வரை பாரத் நியாயா யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கிய பிறகு, பிரதமரின் இயந்திரம் செயலிழந்து விடும்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் 4,000 கி.மீ., பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு பின் கர்நாடகா, தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இப்போது ராகுலின் யாத்திரை மகாராஷ்டிராவில் தொடங்கப்படவுள்ளது. இங்கேயும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவது உறுதி. காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த 100 நாட்கள் மிகவும் முக்கியமானவை.
வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த 100 நாட்களை நாட்டிற்காக அர்ப்பணித்து காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர கடுமையாக உழைக்க வேண்டும். ஒவ்வொரு மருந்துக்கும் காலாவதி தேதி உண்டு. அதேபோல் நரேந்திர மோடியின் மருந்தும் விரைவில் காலாவதியாகும். இனி நாட்டில் மோடி மருந்து வேலை செய்யாது" என்றார்.
Also Read
-
மதக்கலவரத்தை தடுக்க சக்கர வியூகத்தை உருவாக்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
-
“ஆதிக்கமற்ற சமத்துவ சமுதாயத்தை அமைத்தே தீருவோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்கள்.. இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழ்நாடு: நெகிழ்ச்சி சம்பவம்!
-
“கல்வி எனும் ஆயுதத்தால் மேலெழுந்த அறிவுச்சூரியன் அம்பேத்கர்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“திருப்பரங்குன்றத்தைக் கலவரப் பூமியாக மாற்றியது பா.ஜ.க. கும்பல்!” : முரசொலி தலையங்கம்!