Politics

நீட் அநீதிக்கு எதிராக கையெழுத்திடும் தமிழ்நாட்டு மக்கள்- 50 நாட்களில் பெறப்பட்ட 72 லட்சம் கையெழுத்துகள் !

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.

எனினும் ஒன்றிய அரசு நீட் தேர்வை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடி வருகிறது. இதற்காக மாநாடு, ஆர்ப்பாட்டம், போராட்டம் என அனைத்தும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் திமுகவின் மாணவரணி, இளைஞரணி, மருத்துவரணி சார்பில் தொடங்கப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 'நீட் விலக்கு நம் இலக்கு' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த கையெழுத்து இயக்கம் தற்போது 50 நாட்களை எட்டியுள்ள நிலையில், இதுவரை 72 லட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அமைச்சரும், கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், " முதலமைச்சர், கடந்த அக்டோபர் 21 அன்று தொடங்கி வைத்த நீட் விலக்கு நம் இலக்கு கையெழுத்து இயக்கம் மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது.

‘50 நாட்கள் - 50 லட்சம் கையெழுத்துகள்’ என்ற இலக்கோடு தொடங்கப்பட்ட இந்த கையெழுத்து இயக்கம், இன்றோடு 50 நாட்களை கடந்திருக்கிறது. இணையத்தில் 56 லட்சம் - அஞ்சல் வழியே 16 லட்சம் என 72 லட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துகள் பெறப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்கள் நீட் அநீதிக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்த கையெழுத்துகளை எல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் ஒப்படைக்கவுள்ளோம். இதற்காக களத்திலும் - இணையத்திலும் அயராது உழைத்து வரும் மாவட்டக் கழக செயலாளர்கள் - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகள் - இளைஞரணி நிர்வாகிகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீட் ஒழிப்புக்கான இந்த கையெழுத்து இயக்கம் மகத்தான வெற்றியை பெறுகிற வகையில் உழைத்திடுவோம் - நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவை நனவாக்குவோம்" என்று கூறியுள்ளார்.

Also Read: "தமிழ்நாடு அரசின் மழைநீர் வடிகால் அமைப்பு பயனளித்துள்ளது" - நீர் மேலாண்மை வல்லுநர் கருத்து !