Politics

தலைக்கு மேல் தொங்கும் கத்தி : ஒன்றிய அரசின் திட்டத்தால் பாதிக்கப்படும் தென்னிந்தியா - உதயநிதி எச்சரிக்கை!

இணைய ஊடக நிறுவனமான ஏபிபி குழுமம் ABP Rising Summit 2023 என்ற நிகழ்ச்சியை சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பாஜக அரசின் மக்களவைத் தொகுதிகளின் மறுசீரமைப்பு திட்டம் குறித்த பல்வேறு தகவல்களை உதயநிதி ஸ்டாலின் வெளிப்படுத்தினார். இது குறித்துப் பேசிய அவர், "1970களில், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மத்திய அரசு ஊக்குவித்தது. தென்னிந்திய மாநிலங்கள் இந்த நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்தின.

இதனால் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம், அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தாத பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. இது தென்னிந்திய மாநிலங்களின் மக்கள்தொகை பங்கை திறம்பட குறைத்தது. இன்று இது நமக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் அனைவரும் அறிவீர்கள், ஒவ்வொரு மாநிலமும் அதன் மக்கள்தொகை விகிதத்தில் இடங்களைப் பெற வேண்டும் மற்றும் தொகுதிகள் மக்கள்தொகையின் அளவிற்கு சமமாக இருக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.

ஒன்றிய அரசு 1970-களில் மக்கள் தொகையைக் குறைக்க திட்டமிட்டது. ஒன்றிய அரசின் இந்தக் கொள்கை அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் கைவிடப்பட்டது. 2001ல், மீண்டும் மக்களவைத் தொகுதிகளின் மறுசீரமைப்பு பணியை கொண்டுவந்தபோது இடங்களை இழக்க வாய்ப்புள்ள தென்னிந்திய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த எதிர்ப்பின் காரணமாக, அப்போதைய NDA அரசாங்கம் மற்றொரு அரசியலமைப்பு திருத்தத்தை அரசியலமைப்பின் 84 வது திருத்தத்தை, மேலும் 25 ஆண்டுகளுக்கு அதாவது 2026 வரை நீட்டித்தது.

தற்போது இந்த காலக்கெடுவிற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ளன. எனவே, எல்லை நிர்ணயம் நம்மை எவ்வாறு பாதிக்கும்? என்பதை உணர வேண்டும். இந்த திட்டம் கொண்டுவரப்பட்டால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களும் மக்களவையில் தங்கள் பங்கை இழக்கும். மக்களவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை மாற்றாமல் எல்லை நிர்ணயம் செய்தால், தமிழகம் தற்போது 39 இடங்களிலிருந்து 31 இடங்களாக இழக்கும். இது தென் மாநிலங்களின் குரலை அடக்குவதற்கான தெளிவான முயற்சி .

தொகுதி நிர்ணயம் என்பது தலைக்கு மேல் தொங்கும் கத்தி என நமது முதலமைச்சர் கூறியுள்ளார். நமது உரிமைகளை பறிக்க நடத்தப்படும் சதியை நாம் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும். மாநில உரிமைகளுக்காகப் போராடும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த நடவடிக்கையை எதிர்க்கும் என்று நான் நம்புகிறேன். இந்த நடவடிக்கையை சரியாகச் சிந்திக்கும் ஒவ்வொரு குடிமகனும் எதிர்கொள்வார்கள். மேலும், இந்த மக்கள் இயக்கத்தில் தி.மு.க முன்னணியில் இருக்கும் என்று என்னால் உறுதியளிக்க முடியும்." என்று கூறியுள்ளார்.

Also Read: நிலக்கரி இறக்குமதியில் ரூ.10 ஆயிரம் கோடி ஊழல்? : மோடி ஆட்சியில் அதானி மெகா வசூல் - Financial Times பகீர்!