Politics
புதுச்சேரி: “போலி பத்திரம்.. மக்கள் சொத்துக்கு பாதுகாப்பில்லை..” - ஆதாரத்துடன் நாராயணசாமி குற்றச்சாட்டு!
புதுச்சேரி பத்திரப்பதிவு துறையில் இமாலய ஊழல் நடப்பதாகவும், யார் சொத்தை வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் போலி பத்திரங்கள் மூலம் பதிவு செய்து கொடுக்கும் மோசடி நடைபெற்று வருவதாக வீடியோ ஆதாரத்துடன் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “ஒன்றியத்தில் உள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு எதிர்க்கட்சி தலைவர்களை திட்டமிட்டு பழிவாங்கும் வேலையில் இறங்கியுள்ளது. எதிர்க்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் மூலம் சோதனை செய்து பொய் வழக்கு போடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இதன் உச்சக்கட்டமாக திமுக எம்பி ஜெகத்ரட்சகன், கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ, மேற்குவங்க அமைச்சர் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தப்பட்டது. புதுச்சேரியில் மின் கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கட்டண உயர்வை எரசு உடனே திரும்ப பெற வேண்டும்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “புதுச்சேரியில் போலி பத்திரங்கள் தயாரித்து நிலங்களை அபகரிக்கும் வேலையில் புதுச்சேரியில் உள்ள ஆட்சியாளர்களின் ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். பத்திரப்பதிவு துறையில் உள்ள இன்டெக்ஸ் புத்தகத்தில் உள்ள உயிர் சாசன பக்கத்தை கிழித்துவிட்டு புதிதாக யாருக்கு சொத்தை பதிய வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்களது பெயரில் போலி உயில் சாதனத்தை இணைக்கும் மெகா மோசடி நடைபெற்று வருகிறது.
உழவர்கரை சார் பதிவாளர் அலுவலகத்தில் 29, பாகூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 3 என மொத்தம் 32 போலி பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு துறைக்கு சம்பந்தமில்லாதவர்கள் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு அலுவலகத்திற்கு உள்ளே சென்று உயிர் சாசனத்தை மாற்றி இருக்கிறார்கள். இதற்கான வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.” என்று கூறி வீடியோக்களை காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இதுகுறித்து உதவி ஆட்சியர் விசாரணை நடத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளின் பின்னணி இருக்கிறது. ஒரு பத்திரத்துக்கு ஒரு எண்தான் கொடுக்கப்படும். ஆனால் இரண்டு பத்திரங்களுக்கு ஒரே எண் கொடுக்கப்பட்டிருக்கிறது.
யார் சொத்தை வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் போலி பத்திரங்கள் மூலம் எழுதி கொடுப்பார்கள். அந்த அளவுக்கு பத்திரப்பதிவு துறையில் இமாலய ஊழல் நடக்கிறது. அரசியல்வாதிகள் துணையோடு நில அபகரிப்பில் பெரிய கூட்டம் செயல்பட்டு வருகிறது. இதனால் மக்கள் சொத்துக்கு பாதுகாப்பு இல்லை” என்று குற்றம் சாட்டினர். இதனால் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
தொகுதி மறுவரையறை : இதுதான் தி.மு.க-வின் நிலைப்பாடு - பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசியது என்ன?
-
தவெக அரசின் தனித்தீர்மானத்தால் எதுவும் செய்யமுடியாது; தமிழ்த்தாயையுமா ஏமாற்ற வேண்டும்? : முரசொலி காட்டம்!
-
காவிரி விவகாரம் ; பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒருபோதும்... : தவெக அரசுக்கு வலியுறுத்திய ஓ.பன்னீர்செல்வம்!
-
விமர்சனத்தைச் சகித்துக் கொள்வார்களா? ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறதா?: தவெக அரசுக்கு இந்து ராம் கேள்வி!
-
‘ஜனநாயகன்’ ரிலீஸ் புரமோஷனுக்காகத் தான் கர்நாடகா செல்லவே திட்டமிட்டாரா விஜய்? : முரசொலி தலையங்கம்!