Politics

”தேர்தலை பார்த்துப் பயப்படும் மோடி” : ஆம் ஆத்மி MP கைது நடவடிக்கைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்!

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையைக் கொண்டு எதிர்க்கட்சிகளை மிரட்டி வருகிறது. இதில் எதிர்க்கட்சிகள் பணிந்துவிட்டால் ஆட்சியைக் குறுக்குவழியில் பிடித்துவிடுகிறது பா.ஜ.க. மகாராஷ்டிராவில் இப்படிதான் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது பா.ஜ.க

அதேநேரம் பா.ஜ.கவின் எந்த மிரட்டலுக்கும் அஞ்சாத எதிர்க்கட்சிகளை அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையை ஏவி அவர்களைக் கைது செய்து பழிவாங்கி வருகிறது. டெல்லியில் மதுபான கொள்கையில் மோடி நடந்ததுள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் மணீண் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. தற்போது வரை அவருக்கு ஜாமீன் தரப்படவில்லை.

மேலும் எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி வலுவடைந்துள்ளதால் அமலாக்கத்துறையின் வேட்டையை பா.ஜ.க அரசு வேகப்படுத்தியுள்ளது. நேற்று மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின்னர் அவரை மாலையில் கைது செய்துள்ளது.

இந்த கைது நடவடிக்கைக்கு முன்பு, எந்த ஆதாரத்தையும் காட்டாமல் தன்னை கட்டாயப்படுத்தி அமலாக்கத்துறை கைது செய்ததாக, சஞ்சய் சிங் கைதாவதற்கு முன்பாக எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ஒன்றிய அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர்,"சஞ்சய் சிங்கை கைது நடவடிக்கை முற்றிலும் சட்ட விரோதமானது. இது பிரதமர் மோடியின் பதற்றத்தைக் காட்டுகிறது.

இனி தேர்தல் வரையிலும் இன்னும் பல எதிர்க்கட்சி தலைவர்களை அவர்கள் கைது செய்வார்கள். நேற்று பத்திரிகையாளர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. இன்று சஞ்சய் சிங் வீட்டில், நாளை உங்கள் வீட்டில் கூட ரெய்டு நடத்தப்படலாம். 2024 மக்களவை தேர்தலில் தோல்வி அடைவது உறுதி என தெரிந்ததால் பாஜவின் அவநம்பிக்கையான முயற்சிகள் இவை" என தெரிவித்துள்ளார்.

Also Read: உண்மையை சொன்ன மருத்துவமனை டீனை கழிவறை சுத்தம் செய்ய வைத்த MP.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!