Politics

பாஜகவோடு கூட்டணி.. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியிலிருந்து விலகும் முக்கிய தலைவர்கள்.. கர்நாடகாவில் பரபரப்பு

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த தேர்தலில் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் இதில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர். அதே போல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

அதனைத் தொடர்ந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியோடு கூட்டணி என பாஜக தலைவர்கள் தன்னிச்சையாக அறிவித்தனர். முதலில் இதனை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் தேவகவுடாவின் மகனுமான குமாரசாமி மறுத்தாலும் பின்னர் அதனை ஒப்புக்கொண்டார்.

syed shafiullah

இந்த நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவோடு கூட்டணி அமைத்ததைத் தொடர்ந்து அந்த கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து விலகி வருகின்றனர். அங்கு பாஜக ஆட்சியில் இருந்தபோது கொண்டுவந்த சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் காரணமாக சிறுபான்மையினர் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

ஆனால், தற்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவோடு கூட்டணி அமைத்ததைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநில துணைதலைவர் சையத் சபிவுல்லா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் காதர் ஷாஹீத்தும் அக்கட்சியில் இருந்து விளங்குவதாகவும், இது குறித்து விரைவில் தலைமைக்கு தெரியப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இது தவிர மேலும் ஏராளமானோர் அக்கட்சியில் இருந்து விலகுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: பெண்­கள் மத்­தி­யில் முதலமைச்சரின் செல்­வாக்கு அதிகரித்து வருகிறது - The New Indian Express புகழாரம் !