Politics

மணிப்பூரில் தொடரும் கலவரம்: 3 இளைஞர்கள் சுட்டுக்கொலை.. ராணுவம் திரும்பபெறப்பட்ட நிலையில் நடந்த வன்முறை !

மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது.இந்த வன்முறையில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதோடு இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் அடித்து கொலை செய்தனர்.மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு தற்போது அங்கு இணையம் வழங்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே உறையவைத்தது. மேலும் இதுபோன்ற பல்வேறு கொடுமையான சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தவண்ணம் உள்ளன.

இதனிடையே மணிப்பூரில் ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில், அங்கு ராணுவத்தை விலக்கி அதற்கு பதில், மாநில காவல்துறையை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ராணுவத்தினர் வெளியேறினர்.

இந்த நிலையில், நேற்று உக்ருல் மாவட்டத்திலுள்ள குக்கி தோவாய் கிராமத்தில் நடந்த வன்முறையில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், "துப்பாக்கிச்சூட்டில் 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அவர்களில் கை கால்களில் ஆழமான வெட்டுக்காயங்கள் இருக்கின்றன" என்று கூறியுள்ளனர். மணிப்பூரில் மீண்டும் வன்முறை பெருகுவது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "தமிழ்நாட்டை உலகின் முதன்மை மாநிலமாக மாற்றுவோம்" : 'start up திருவிழா' நிகழ்ச்சியில் முதலமைச்சர் உறுதி !