Politics

இந்தி தேசிய மொழி.. விபத்து வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்தால் அதிர்ச்சி.. வலுக்கும் கண்டனம் !

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.இது தவிர ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இந்தியைப் பயன்படுத்தச் சொல்வது, அலுவல் பூர்வக்கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு தென்மாநிலங்கள், வாடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு இந்தி தேசிய மொழி என்று பரபரப்படும் போலியான கருத்தாக்கத்தை பலரும் நம்பி வருகின்றனர். அந்த வகையில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரே அதனை நம்பி தீர்ப்பளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் நடந்த வாகன விபத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் இது குறித்து மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் எனக்கு இந்தி தெரியாத நிலையில், உத்தரப்பிரதேசத்திலுள்ள தீர்ப்பாயத்தில் எவ்வாறு இந்தியில் வாதிடுவது. எனவே இந்த வழக்கை விபத்து நடந்த டார்ஜிலிங் மாவட்டத்திலுள்ள தீர்ப்பாயத்துக்கு மற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரணை செய்த நீதிபதி தீபங்கர் தத்தா, " இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், இந்தி தேசிய மொழியாக இருப்பதால் மனுதாரர் உத்திரப்பிரதேசத்திலுருக்கும் தீர்ப்பாயத்தில் தனது வாதங்களை முன்வைக்கலாம். மோட்டார் வாகன சட்டமும், உரிமை கோருபவருக்கு அருகிலிருக்கும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர அனுமதிப்பதால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது" என்று தீர்ப்பளித்தார்.

ஆனால், இந்த வழக்கில் நீதிபதி இந்தி தேசிய மொழி என்று தவறாக கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பலரும் நீதிபதியின் இந்த தீர்ப்பை குறிப்பிட்டு அவரின் தீர்ப்பில் உள்ள தவறை சுட்டிக்காட்டிய வண்ணம் உள்ளனர்.

Also Read: ”தமிழ்நாடு இந்தியிடம் மண்டியிடாது”.. வெகுண்டெழுந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்!