Politics

மத்திய பல்கலை.யில் சாதிய பாகுபாடு.. 4% பேராசிரியர் மட்டுமே OBC பிரிவினர்.. 85% பேராசிரியர் OC பிரிவினர் !

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஒன்றிய அரசின் ஐஐடி கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில் பெரும்பாலும் உயர்சாதியினரே கல்வி கற்று வரும் நிலையில், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வருகிறது.

அதிலும், சமீப காலமாக அங்கு எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களின் தற்கொலை என்பது தொடர் கதையாக வருகிறது. ஐஐடி, மத்திய பல்கலைக்கழக கல்வி நிறுவனங்ளில் ஆசிரியர் பணியிடங்களில் பெரும்பாலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படாத நிலை இருந்து வருகிறது.

இதன் காரணமாக அங்கு உயர்சாதி என சொல்லிக்கொள்ளும் சமூகத்தை சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் பேராசிரியர்களாக இருந்து வருகின்றனர்.இதுவும் அங்கு எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்கள் நுழைய முடியாததற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், 45 மத்திய பல்கலைக்கழகங்களில் நான்கு சதவீத பேராசிரியர்கள் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில், மத்திய பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவினர்களின் பிரதிநிதித்துவம் குறித்து சஞ்சய் குமார் எம்.பி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு ஒன்றிய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் அளித்துள்ள பதிலில், மத்திய பல்கலைக்கழகங்களில் 4% பேராசிரியர்கள் மற்றும் 6 % இணை பேராசிரியர்கள் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், 85 % பேராசிரியர்கள் மற்றும் 82 % இணை பேராசிரியர்கள் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், 45 மத்திய பல்கலைக்கழகங்களில் ஐந்து துணை வேந்தர்கள் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு மத்திய பல்கலைகழகங்களில் நிலவும் சாதிய பாகுபாட்டை வெளிக்காட்டியுள்ளது.

Also Read: மணிப்பூர் வன்முறையில் சிக்கி தப்பிய இந்திய அணி வீரரின் குடும்பம்.. மைதானமும் எரிக்கப்பட்டதால் அதிர்ச்சி!