Politics

ஒரு சமூகத்தை மட்டுமே பழிசுமத்த முடியாது -மணிப்பூர் கலவர வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியது என்ன?

மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்த்தி இனத்தவர்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியால் கடந்த மே 3ம் தேதி கடும் வன்முறை ஏற்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்த வன்முறை நடந்து வருகிறது.

மேலும் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி பழங்குடியினத்தவர்கள் மெய்தி இனத்தவர்களால் அடித்து விரட்டப்படுகின்றனர். அங்கு 2 பழங்குடியின பெண்கள் நிர்வாண நிலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ நாட்டையே உலுக்கி உள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஒன்றிய அரசு தொடர்ந்து அவையை ஒத்திவைத்து வருகிறது.

இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றமும் ஒன்றிய, மாநில பாஜக அரசுகளை விமர்சித்து காட்டமான கருத்துக்களை கூறியுள்ளது. இதனிடையே மணிப்பூரைச் சேர்ந்த ஒருவர், போதைப்பொருள், சட்டவிரோத ஊடுருவலில் குறிப்பிட்ட சமூகம் ஈடுபடுவதாகவும், இதைத் தடுத்து நிறுத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட், "இந்த மனு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின்மீது மட்டும் பழிசுமத்தி, அவர்களை மட்டுமே பொறுப்பேற்க சொல்கிறது. புலம்பெயர்ந்தவர்கள்தான் வன்முறையைத் தூண்டிவிட்டதால், இதை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்றும் இந்த மனு கூறுகிறது.ஆகவே இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது கடினமான ஒன்று. இது நீதித்துறைக்கு ஏற்றதல்ல, எனவே மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறும், சட்டத்தின்கீழ் கிடைக்கும் தீர்வுகளைப் பின்பற்ற வேண்டும்" என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Also Read: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 35 வயது வாலிபரை அடித்துக் கொன்ற தந்தை : ஒடிசாவில் பகீர்!