Politics

மகாராஷ்டிர அரசியல்: "வயதாகிவிட்டது ஓய்வு பெறுங்கள்"- அஜித் பவாரின் கருத்துக்கு சரத் பவாரின் பதிலடி என்ன ?

மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

ஆனால் இதற்கு உடன்படாத பாஜக தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.

சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது சிவசேனா பணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக உடைத்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் 29 எம்.எல்.ஏக்கள் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதில் 8 பேருக்கு உடனடியாக ஆளுநர் அமைச்சராக பதவியேற்பு நடத்திய நிலையில், அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி ஒதுக்கப்பட்டது.

அதன்பின்னர் கட்சியில் ஏற்பட்ட பிளவு குறித்து கருத்து தெரிவித்த அஜித் பவார் வயதை கருத்தில் கொண்டு தீவிர அரசியலில் இருந்து சரத் பவார் விலக வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்து அவரின் ஆதரவாளர்கள் மத்தியிலேயே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், பல்வேறு மூத்த தலைவர்களும் அஜித் பவாருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அஜித் பவாரின் கருத்துக்கு தேசியவாத கட்சி தலைவர் சரத் பவாரும் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "மொரார்ஜி தேசாய் எந்த வயதில் பிரதமரானார் தெரியுமா? நான் பிரதமராகவோ, அமைச்சராகவோ ஆக விரும்பவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன். தான் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று கட்சித் தொண்டர்கள் விரும்புவதால் தொடர்ந்து மக்கள் பணி ஆற்றுவேன்" என்று கூறியுள்ளார்.

Also Read: ஆளுநர் RN ரவி அந்தப் பதவிக்கு தகுதியற்றவர்.. - குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் !