Politics

ரூ.2000 நோட்டால் பதுக்கல் அதிகரிக்கும் என்று மோடிக்கு முன்பே தெரியும்- மோடியின் முன்னாள் செயலாளர் கருத்து

கடந்த 2016-ம் ஆண்டு ஊழலை ஒழிப்பதாக கூறி, இரவோடு இரவாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி, தங்களிடம் இருந்த பணத்தை ஏடிஎம்., வங்கி என வரிசையாக நின்று, சாப்பிடாமல் கூட மாற்றிக்கொண்டனர். இந்த நிகழ்வால் பொதுமக்கள் பலவகையில் துன்பங்களை அனுபவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக புது ரூ.500 நோட்டுகளும், ரூ.2000 நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வரை இந்த ரூபாய் நோட்டுகள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி இந்த நோட்டுகளை திரும்ப பெறப்போவதாக அறிவித்துள்ளது.

அதன்படி பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வரும் மே 23 முதல் செப்டம்பர் 30 வரை வங்ககளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும், நாள் ஒன்றுக்கு ஒரு நபர் ரூ.20,000 மதிப்பிலான ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.மேலும் ரூ.2000 நோட்டுகள் இனிமேல் புதிதாக புழக்கத்துக்கு வராது என்றும், ஏற்கெனவே அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட நோட்டுகள் செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளைக் கொண்டுவருவதற்கு பிரதமர் மோடி முதலில் ஆதரவாக இல்லை என்ற அதிர்ச்சி உண்மையை பிரதமரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் கூறியுள்ளார்.

நிருபேந்திர மிஸ்ரா

இது குறித்து பேசிய பிரதமரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா, "முதலில் 2,000 ரூபாய் நோட்டுகளைக் கொண்டுவருவதற்கு பிரதமர் மோடி ஆதரவாக இல்லை. ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறுகியகாலத்தில் நிறைவேற்றப்படவிருந்ததால், வேறு வழியின்றி 2,000 ரூபாய் நோட்டுகளுக்குத் தயக்கத்துடன் அனுமதியளித்தார்.அதிக ரூபாய் மதிப்புடைய நோட்டுகள் வந்தால் பதுக்கிவைப்பது அதிகரித்துவிடும் என்று முன்பே அவருக்கு தெரியும்" என்று கூறியுள்ளார்.

Also Read: பாஜக அரசை கண்டித்து புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் -மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு !