Politics

தேசிய கல்வி கொள்கை விவகாரம் : தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு CPIM வரவேற்பு !

தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக மாநிலக் கல்விக்கொள்ளை அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, நிகழ்காலச் சூழல் மற்றும் எதிர்காலத் தேவைகள் மற்றும் கனவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாடு மாநிலத்திற்கென தனித்துவமானதொரு மாநிலக் கல்விக் கொள்கையினை வகுக்க தமிழ்நாடு அரசு உறுதிப் பூண்டுள்ளது.

இதற்காக, நீதியரசர் (ஓய்வு) த. முருகேசன் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழு அமைத்து 01.06.2022 அன்று தமிழ்நாடு அரசு ஆணையிட்டது (அரசாணை எண் 98). மேற்காணும் நோக்கத்திற்கிணங்க, கடந்த ஓராண்டு காலமாக இக்குழு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட கள அளவில் கல்வி சார்ந்து செயல்படும் அனைவரிடமும் பொது கலந்துரையாடல் போன்ற செயல்பாடுகள் இதில் அடங்கும். அத்துடன் ஆசிரியர் சங்கங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்டப் பலருடனும் தனித்தனியான கூட்டங்கள் நடத்தப்பட்டன.

மேலும், குழுவினர் சில கல்வி நிறுவனங்களைப் நேரடியாக பார்வையிட்டு, அவர்கள் பார்வையிலிருந்து சிக்கல்களைப் புரிந்து கொள்வதற்கான முயற்சிகளையும் எடுத்தனர். இவற்றைக் கடந்து, நடைமுறைச் சிக்கல்களைப் புரிந்து கொள்வதற்காக அரசின் பல்வேறு துறைகளுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. இக்கலந்துரையாடல்கள் குறிப்பாக கல்விக் கொள்கையின் தாக்கத்தை செயல்பாட்டுத் தரப்பிலிருந்து புரிந்து கொள்ளும் முனைப்புடன் நடத்தப்பட்டன. பல்வேறு அரசு துறைகளின் செயலாளர்கள் தங்கள் துறை சார்ந்த கருத்துக்களையும் தரவுகளையும் குழுவின் முன் நேரில் விளக்கி அறிக்கையாக அளித்தனர்.

அரசு துறைகளுடன் நடந்த கலந்துரையாடல்கள் மிகவும் வெளிப்படையான முறையில் குழுவின் உறுப்பினர்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்டன. குழுவின் செயல்பாடுகளில் எவ்விதத்திலும் அரசு அதிகாரிகளின் தலையீடு இருக்கவில்லை. குழு முழுமையான சுதந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது. தெளிவாக வரையறுக்கப்பட்ட நோக்கங்களுடன் கூடிய ஒரு பொதுக் கொள்கை அறிக்கையை அளிப்பதே குழுவின் இலக்கு என்ற அடிப்படையில், கொள்கை வகுப்பதற்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையிலான நுட்பமான தொடர்புகளை கவனத்தில் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது.

ஒரு கொள்கை எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தக்க செயல்பாட்டு கட்டமைப்பை உருவாக்க வேண்டுமெனில், தற்போது நிலவும் சூழலின் பன்முகத் தன்மையை முழுமையாகப் புரிந்து உள்வாங்கியிருப்பது முதன்மையானத் தேவையாகும். இதை கவனத்தில் கொண்டே, களத்தில் நேரடியாக செயல்படுபவர்கள் தொடங்கி அரசின் உச்ச அதிகாரிகள் வரை தொடர்புடைய அனைவரிடமும் கலந்துரையாடுவதை குழு உறுதிப்படுத்தியது.

நீதியரசர் (ஓய்வு) த. முருகேசன் தலைமையில், தமிழ்நாட்டிற்கென ஒரு தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில், ஆழமான ஆய்வுக் கண்ணோட்டத்துடன் குழு செயல்பட்டு வருவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. குழுவின் செயல்பாடுகள் மீது அரசு முழுமையான நம்பிக்கையைக் கொண்டுள்ளது. மேலும், இந்த உயர்மட்டக் குழுவில் டாக்டர் டி. ஃப்ரீடா ஞானராணி, டாக்டர். ஜி. பழனி ஆகிய இரு புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குழு தனது இறுதி அறிக்கையை அளிக்க மேலும் நான்கு மாதங்கள் கால நீட்டிப்பு தரப்பட்டுள்ளது. அதன்படி குழு 2023 செப்டம்பர் மாத இறுதிக்குள் தனது அறிக்கையை அளிக்கும். குழுவின் அறிக்கை வரப்பெற்றதும் அதில் உள்ள பரிந்துரைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்கால நலன் மற்றும் நம் மாநிலத்தின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கென சிறப்பானதொரு கல்விக் கொள்கையை வகுக்கும்.

அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கிட வேண்டும் என்ற உன்னத நோக்கோடு சமச்சீர் கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களை மேற்கொண்ட தமிழினத் தலைவர் கலைஞர் காட்டிய வழியில் நடைபோடும் நமது அரசு, மாநில உரிமைகளைக் காக்கும் விதத்தில் தொடர்ந்து செயலாற்றும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்புக்கு சி.பி.எம் கட்சி வரவேற்பளித்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ (எம்) கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "ஒன்றிய பாஜக அரசு தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் நாடு முழுவதும் கல்வியில் சனாதன இந்துத்துவ கோட்பாட்டை புகுத்த தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதுமட்டுமின்றி பாடப்புத்தகங்களை மாற்றியமைப்பது, சுதந்திரப்போராட்ட வரலாறு உட்பட இந்திய வரலாற்றை மத அடிப்படையில் மாற்றி மாணவர்களுக்கு கற்பிப்பது போன்ற ஆபத்தான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஒன்றிய அரசின் இத்தகைய தவறான நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு நிலைமைகளுக்கேற்ப தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்கிட நிபுணர்களைக் கொண்ட உயர்மட்டக்குழு அமைத்தது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை பெரும் பாராட்டைப் பெற்றதுடன் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விஞ்ஞான அடிப்படையிலான கல்வி கிடைத்திட நல்ல வாய்ப்பு ஏற்பட்டது.

அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு கல்விக்கொள்கை உருவாக்குவதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் குழுவின் செயல்பாடுகள் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்தி மிகுந்த கவலையளிப்பதாக இருந்தது. தமிழ்நாடு அரசின் உயர்ந்த நோக்கம் பாதிக்கப்படுமோ என்ற கேள்விகளும் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழும்பியது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு மாநில அடிப்படையிலான கல்விக் கொள்கை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க கவனம் செலுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதலமைச்சரைச் சந்தித்து முறையிட்டோம்.

பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கருத்துக்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு குழுவை சீரமைத்துள்ளதுடன் தமிழ்நாட்டிற்கு என ஒரு தனித்துவமான மாநிலக் கொள்கையை உருவாக்கும் பணியில் இக்குழு ஈடுபடும் எனவும், குழுவின் அறிக்கை வரப்பெற்றதும் அதில் உள்ள பரிந்துரைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்கால நலன் மற்றும் நம்மாநிலத்தின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிறப்பானதொரு கல்விக் கொள்கையை வகுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளதை வரவேற்கிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: “தெற்கில் ஏற்பட்ட விடியல்..” : கர்நாடகாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கெளரவித்த தேசிய தலைவர்கள் !