Politics

ஓரே ஆண்டில் 35% வீழ்ச்சியை சந்தித்த LIC.. மோடியின் சதியால் 1.89 லட்சம் கோடியை இழந்த அரசின் நிறுவனம் !

நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை பெரு முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் வகையில், அரசு நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது, ஒட்டுமொத்தமாக தனியார் வசம் ஒப்படைப்பது என பல்வேறு வகையில் தனியார்மயமாக்கலை ஊக்குவித்து வருகிறது மோடி அரசு.

குறிப்பாக, பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலமாக 2.1 லட்சம் கோடி வருவாய் ஈட்டப் போவதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறார். அரசுக்கு இருக்கும் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை தங்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள் ஒன்றிய ஆட்சியாளர்கள்.

இதன் தொடக்கமாக கடந்த 2021 பிப்ரவரி 1 ஆம் நாள் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசிடம் உள்ள எல்.ஐ.சி.யின் 100 சதவிகிதப் பங்குகளின் ஒரு பகுதியை தனியாருக்கு விற்கப் போவதாக அறிவித்தார்.

அதோடு அல்லாமல், இதற்கான பொதுக்காப்பீட்டுத் திட்ட மசோதாவை கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 2 அன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது ஒன்றிய பா.ஜ.க அரசு. மேலும் எல்.ஐ.சி பங்குகளை விற்பதற்கு இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி கொடுத்தது.

அதன்படி, அரசிடம் இருந்த 4.99 சதவிகித பங்குகள் விற்கப்பட்டது. கடந்த ஆண்டு மே 4-ம் தேதி தொடங்கி மே9 ஆம் தேதி வரை வரை நடைபெற்ற இந்த விற்பனையின்போது எல்.ஐ.சி.யின் பங்கு விலைகள் ரூ.902-949 என்ற கணக்கில் விற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எல்.ஐ.சி.யின் பங்குகள் மே 12-ம் தேதி பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலே கடும் சரிவை சந்தித்த நிலையில், அது தொடர்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், எல்.ஐ.சி.யின் பங்குகள் தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில், இந்த பங்கு விற்பனை நடந்து ஒரு ஆண்டில் மட்டும் எல்.ஐ.சியின் சந்தை மூலதனம் 35% வீழ்ச்சியை சந்தித்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மே மாதம் இதே நாளில் எல்.ஐ.சியின் சந்தை மூலதனம், அப்போது ரூ.5.48 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது அது ரூ.3.59 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. இதனால் எல்.ஐ.சி.யில் முதலீடு செய்துள்ள கோடிக்கணக்கானோரின் சந்தை மதிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சமூக ஊடகங்கள் மூலம் வெளியிட்டுள்ளார்.

Also Read: அதானிக்காக நாடாளுமன்றத்தில் பொய் சொன்ன செபி, நிர்மலா சீதாராமன்.. -உச்சநீதிமன்றம் மூலம் வெளிவந்த உண்மை !