Politics
“நாங்க ஒற்றுமையா இருக்கோம்.. யார் முதுகிலும் குத்த மாட்டேன்” -கர்நாடக காங்கிரஸ் தலைவர் DK சிவகுமார் உறுதி
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
135 தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் இதில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர்.
மேலும் நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், ஹரபனஹள்ளி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற லதா மல்லிகார்ஜுனா, சித்தராமையாவை அவரது இல்லத்தில் சந்தித்து காங்கிரஸுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதனால் காங்கிரஸுக்கு கூடுதல் பலம் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமையவுள்ள நிலையில், இதில் முதலமைச்சர் யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது. ஏனெனில் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையாவுக்கும், கர்நாடக காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவகுமாருக்கும் போட்டி நிலவி வருகிறது.
இதனிடையே காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு MLA-க்கள் பிரிந்து விடுவார்களோ என்ற அச்சமும் பொதுமக்கள் உட்பட அனைவர் மத்தியிலும் நிலவியுள்ளது. மேலும் டிகே சிவகுமாருக்கும், சித்தராமையாவுக்கும் இடையே போட்டியுடன் சேர்ந்து மோதலும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் தனக்கும் சித்தராமையாவுக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பது போன்று பலரும் சித்தரித்து வருவதாகவும், ஆனால் எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும், கட்சிக்காக பல தியாகங்கள் செய்த சித்தராமையா பக்கம் தான் பல முறை நின்று இருப்பதாகவும், கர்நாடகா காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் அண்மையில் பேட்டி அளித்திருந்தார்.
தொடர்ந்து நேற்றைய முன்தினம் நடைபெற்ற காங்கிரஸ் MLA-க்கள் பொதுக்கூட்டத்தில், கர்நாடகாவில் யார் முதல்வர் என்று கட்சி மேலிடம் அறிவிப்பதை முழுமனதாக ஏற்றுக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று டி.கே சிவகுமாரும் டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் முன் ANI செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த டி.கே சிவகுமார், "எங்களுடையது(காங்கிரஸ்) ஒன்றுபட்ட வீடு, எங்கள் எண் 135. இங்கு யாரையும் பிரிக்க விரும்பவில்லை. அவர்கள் என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நான் மாநில தலைவராக ஒரு பொறுப்பை பெற்றிருக்கிறேன். யார் முதுகில் குத்தவும் மாட்டேன், மிரட்டவும் மாட்டேன்" என்றார்.
Also Read
-
திருட்டுப் பூனையின் உருட்டல்களுக்கு மக்கள் ஏமாறமாட்டார்கள் : EPS-க்கு அமைச்சர் பெரியகருப்பன் பதிலடி!
-
நீங்கள் சொல்லும் தேசியம் எது? : குடியரசுத் துணைத் தலைவருக்கு கேள்வி எழுப்பிய முரசொலி!
-
தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்க காரணம் இதுதான்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு - முழு விவரம்!
-
சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடாருக்கு ரூ.50 லட்சத்தில் சிலை... திறந்து வைத்த முதலமைச்சர் !
-
புறநகர் ரயில் ரத்து - தென்னக ரயில்வேயின் அலட்சியம்.. கேட்காமலேயே அரசு பேருந்து சேவை: அமைச்சர் சிவசங்கர்!