Politics

"இந்த ஆண்டு 300 மதரஸாக்களை மூடுவேன், அதற்காக பணியாற்றி வருகிறோம்" -பாஜக முதல்வரின் பேச்சால் அதிர்ச்சி !

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக 135 தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது. இந்த தேர்தலில் மோடி பல முறை கர்நாடகா வந்து பிரச்சாரம் செய்தும் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதோடு இந்த தேர்தலில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர்.

பாஜகவின் இந்த தோல்விக்கு கர்நாடகாவில் பாஜகவால் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட இந்துத்துவ அரசியலே காரணமாக்க கருதப்பட்டு வருகிறது. ஹிஜாப் சர்ச்சை, லவ் ஜிகாத், இஸ்லாமியர் இடஒதுக்கீடு ரத்து போன்ற முடிவுகள் பாஜக ஆதரவாளர்களுக்கே முகச்சுளிவை ஏற்படுத்தியதே பாஜகவின் தோல்விக்கு முக்கிய காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், வடஇந்தியாவில் பாஜகவின் வலுவான ஆயுதமாக விளங்கும் இந்துத்துவம் தென்மாநிலங்களில் பாஜகவுக்கு உதவவில்லை என்றும் மாறாக அது பாஜகவை தென்மாநிலங்களில் இருந்து அந்நியப்படுத்திகிறது என்பதும் பல்வேறு தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. ஆனாலும் பாஜக தென்மாநிலங்களில் தனது இந்துத்துவ கொள்கையில் இருந்து விலகாமலே இருந்துவருவது தற்போது அம்பலமாகியுள்ளது.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் பாஜகவை சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "அசாமில் லவ் ஜிகாத்தை நிறுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம், அசாமில் மதரஸாக்களை மூடுவதற்கும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். நான் முதல்வராக ஆன பிறகு, அசாமில் 600 மதரஸாக்களை மூடினேன். இந்த ஆண்டு

மேலும் 300 மதரஸாக்களை மூடுவேன் என்று ஓவைசியிடம் கூற விரும்புகிறேன்" என்று சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: 90 % இடங்களில் படுதோல்வி.. அண்ணாமலைக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் படுகுழிக்கு சென்ற கர்நாடக பாஜக !