Politics

"உட்கட்சி விவகாரங்களில் தலையிடவோ, அரசியல் பங்காற்றவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை" -உச்சநீதிமன்றம் கருத்து!

மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்வராக இருக்க ஒப்புதல் கொடுத்தால் பா.ஜ.கவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

ஆனால் இதற்கு உடன்படாத பா.ஜ.க தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது.அதைத் தொடர்ந்து பா.ஜ.க சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றார்.ஆனால் இந்த அரசு சில நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின்னர் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி வைத்த நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.

சுமார் 3 ஆண்டுகள் நீடித்த இந்த அரசு சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பா.ஜ.க ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்று, துணை முதல்வர் பதவி பா.ஜ.கவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.

இந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு மஹாராஷ்டிரா ஆளுநர் கோஷியாரி உடந்தையாக இருந்ததாகவும், ஏக்நாத் ஷிண்டே என்ற தனி நபரை பெருமபான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது தவறு என்றும் உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதீமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

judiciary chandrachud

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது "சிவசேனா விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை அப்பட்டமான அரசியல் நடந்துள்ளது.எந்த சட்டத்தின் கீழ் ஷிண்டேவை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். அரசியலமைப்பு பிரிவு ஏ 168 இன் கீழ் ஆளுநர் சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் கிடையாது.

அவர் சட்டமன்றத்தில் ஒரு அங்கம் மட்டும்தான். அரசியல் கட்சியைத் தவிர வேறு யாரையும் அவரால் அங்கீகரிக்க முடியாது.ஒரு கட்சியைதான் ஆளுநர் அங்கீகரிக்க முடியுமே தவிர, ஆட்களை கிடையாது. பின்னர் அவர் ஆட்சி அமைக்க வாருங்கள் என ஏக்நாத் சிண்டேவுக்கு எப்படி அழைப்பு விடுத்தார்” என்று உத்தவ் தாக்கரே தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி “அரசை கவிழ்ப்பதற்கான எந்த நடவடிக்கையிலும் ஆளுநர் ஈடுபடக்கூடாது.மக்கள் தான் ஆளும் கட்சியை தூக்கி எறிவார்கள். ஆனால் கவர்னரால் இங்கு ஆளும் அரசு கவிழ்க்கப்படுவது ஜனநாயகத்திற்கு சோகமான காட்சியாக இருக்கும்” என்று தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதனிடையே இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ”உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மாநில ஆளுநர் உத்தரவிட்டதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஒரு அரசியல் கட்சியின் சட்டசபை கொறாடாவை அந்த அரசியல் கட்சிதான் நியமிக்க வேண்டுமே தவிற சட்டசபை குழு ஒன்று அரசியல் கட்சி கொறடாவை நியமிக்க முடியாது. மகாராஷ்டிராவில் ஷிண்டே தரப்பு நியமித்த கொறடாவை ஆளுநர் தரப்பு ஏற்றது சட்டவிரோதமானது.உட்கட்சி விவகாரங்களில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை - சிவசேனா யாருக்கு சொந்தமானது என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும்” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Also Read: கர்நாடகாவில் உயரும் கை.. காங்கிரஸுக்கு ஆதரவாக வந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் !