Politics

“ஊழலை நீங்கள் நிரூபித்தால் பொதுவெளியில் தூக்கிலிடுங்கள்..” - பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால் !

டெல்லியில் மதுபான விற்பனைக்கான உரிமங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் எழுந்தது. எனவே இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின்போது டெல்லியின் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியாவை விசாரித்து பின்னர் அவரை கைது செய்தது சிபிஐ.

இந்த வழக்கு தற்போது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் டெல்லி முதலமைச்சர் உட்பட முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக சிபிஐ விசாரித்து வருகிறது. இதற்காக பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவரும் தெலங்கானா முதல்வருமான கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிடம் கடந்த மார்ச் மாதம் சிபிஐ விசாரணை நடத்தியது.

இந்த முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரடியாக தொடர்பு இல்லை என்றாலும், இந்த ஊழலை கண்டும் காணாமல் அவர் இருந்துள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியதோடு, அவரை விசாரிக்கவும் சம்மன் அனுப்பியது. அதனை ஏற்று கடந்த ஏப்ரல் மாதம் நேரில் ஆஜரானார்.

இந்த நிலையில் நேற்று டெல்லியில் 80 கிளினிக்குளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், "சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானத்துறை என அனைத்தையும் அவர்கள் எனக்கு எதிராக செயல்பட வைக்கின்றனர். ஏன்? ஒரே காரணம் தான். எப்படியாவது நான் ஒரு திருடன் என நிரூபிக்க வேண்டும்.

நான் பிரதமர் மோடியிடம் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பிரதமர் அவர்களே, கெஜ்ரிவால் ஊழல்வாதி என்றால், இந்த உலகத்தில் யாருமே நேர்மையானவர்கள் இல்லை. கெஜ்ரிவாலுக்கு எதிராக ஒரு பைசா ஊழலை நீங்கள் நிரூபிக்கும் நாளில், என்னை பொதுவெளியில் தூக்கிலுடுங்கள் என்று நான் கூற விரும்புகிறேன். ஆனால் அதற்கு முன்னால் இந்த நாடகத்தை நிறுத்துங்கள்." என்றார்.

Also Read: சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் அவர்கள் மீது சட்டம் பாயக்கூடாதா?: ஆளுநருக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி!