Politics

"நான் இதை விசாரிக்க கூடாது என இப்படி செய்கிறீர்களா?" -பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆவேசம்!

கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ரா இரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின் குஜராத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையின்போது 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண்ணை இந்துத்துவ கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. மேலும் அவரது குடும்பத்தாரையும், அவரது 2 வயது மகனையும் கொடூரமாக கொன்றது.

இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கிய நிலையில், இதில் தொடர்புடைய 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு கடந்த 2008-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் குற்றவாளிகளான 11 பேரையும், குஜராத் பா.ஜ.க அரசு அண்மையில் விடுதலை செய்ததது. பா.ஜ.க அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விடுதலையை எதிர்த்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது" இன்று பில்கிஸ் பானு, நாளை யார்? அது நீங்களாகவோ அல்லது நானாகவோ இருக்கலாம்.என்ன அடிப்படையில் அவர்களை விடுவித்தனர் என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். அதனை நீங்கள் காட்டாவிட்டால் நாங்கள் முடிவெடுக்கவேண்டியிருக்கும் " என்று காட்டமாக கூறி இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜோசப் மற்றும் நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது விடுதலையான 11 பேரின் தரப்பு வழக்கறிஞர்கள் ஆவணங்களைத் தாக்கல் செய்ய மீண்டும் கால அவகாசம் கோரினர்.

இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள் விசாரணையே நடைபெறக் கூடாது என நினைக்கிறீர்களா? வருகிற மே 19-க்குப் பின் கோடை விடுமுறை தொடங்குகிறது; ஜூன் 16-ந் தேதி நான் ஓய்வு பெறுகிறேன். இப்படி அவகாசம் கேட்டு இவ்வழக்கை நான் விசாரிப்பதையே தடுக்க நினைக்கிறீர்களா? எனவும் நீதிபதி ஜோசப் கேள்வி எழுப்பினார். உச்சநீதிமன்ற நீதிபதி இவ்வாறு ஆக்ரோஷமாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அனுமதியின்றி ரகசிய புகைப்படம்.. பாலியல் சுரண்டலை தடுக்க தேசிய அளவிலான சட்டத்தை அமல்படுத்தும் ஜப்பான் !