Politics

உண்மையில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டார்களா..? பின்னணியில் இருப்பதும் அவர்களின் நோக்கமும் என்ன..?

தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சில நாட்களாக வதந்தி பரவிவருகிறது. அதிலும் குறிப்பாக திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளர்களை சிலர் திட்டமிட்டு தாக்குவதாகவும், சிலரை கொலைசெய்ததாகவும் வீடியோ ஒன்று வைரலானது.

இந்த வீடியோ பரவி சில நேரத்திலேயே பாஜகவினர் இந்த வீடியோகளை திட்டமிட்டு சமூகவலைத்தளத்தில் பரப்பினர். அதிலும் அவர்கள் ஹிந்தி பேசிய காரணத்தால்தான் தாக்கப்பட்டதாக வடமாநில பாஜகவினர் கலவரத்தை உருவாக்கும் நோக்கில் வீடியோவை பரப்பி வந்தனர்.

இந்த வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில ஹிந்தி ஊடகங்கள் இதனை உண்மை என நம்பி அப்படியே இந்த பொய் தகவலை செய்தியாக வெளியிட்டனர். மேலும், சில பத்திரிகையாளர்களும் இது உண்மை என நம்பி தங்கள் சமூகவலைத்தளங்களில் இதுதொடர்பாக கருத்துக்களை பதிவிட்டனர்.

அந்த வீடியோகளை ஆராய்ந்து பார்த்தபோது, அதில் சில பாஜக ஆளும் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. மற்றொரு வீடியோ ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

மேலும் சில வீடியோக்க தமிழ்நாட்டில் பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலானது. சிறு தகராறு காரணமாக அவர்களே மோதிக்கொள்ளும் பழைய வீடியோ ஒன்றை தற்போது பரப்பி வருகின்றனர். மேலும் மற்றொரு வீடியோ கோயம்புத்தூரில் உள்ளூர் மக்களுக்கு இடையில் நடந்த மோதலை வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதலாக தவறாக பரப்பி வருகின்றனர்.

முன்னதாக அதே திருப்பூரில் வடமாநிலத்தவர்கள் தமிழர்களை தாக்கியதாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அது தவறான தகவல் என போலிஸார் மறுப்பு தெரிவித்த பின்னரே நிலைமை கட்டுக்குள் வந்தது.

தற்போது வடமாநிலந்தில் இந்த வீடியோவை பரப்புபவர்கள் பெரும்பாலும் பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் பாஜகவினரே இது போன்ற வதந்தியை பரப்புவது தெரியவந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் கலவரங்கள் மூலம் ஆட்சியை பிடித்த பாஜகவால் நுழைய முடியாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

இங்கு கலவரத்தை உண்டாக்குவதன் மூலம் அரசியல் ரீதியாக ஆதாயம் அடைய பாஜக திட்டமிட்டிருக்கலாம். அல்லது வடமாநிலங்களில் சமீப காலமாக பாஜக வலுவை இழந்து வருகிறது. இதனால் அங்கு தென்மாநிலங்கள் -வடமாநிலங்கள் என்ற நிலையை உருவாக்கி நாட்டை பிரிப்பதன்மூலம் அரசியல் ஆதாயம் பெற பாஜக திட்டமிட்டிருக்கலாம் என்றே இதனை புரிந்துகொள்ள முடிகிறது.

Also Read: குறுமதியாளர்கள் எண்ணம் ஈடேறாது.. வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அரசு அரணாக இருக்கும்: முதலமைச்சர் அறிக்கை!