Politics

பாபர் மசூதி இடிப்பு வழக்கு.. பாஜகவுக்கு ஆதரவான தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு பதவி வழங்கிய ஒன்றிய அரசு !

1992-ம் ஆண்டு இந்துத்துவ கும்பல் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மசூதி இருப்பதாக கூறி அங்கிருந்த பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

அதன்பின்னரும் பாபர் மசூதி விவகாரம் இந்திய அளவில் பரபரப்பான விவகாரமாக திகழ்ந்தது. மேலும், பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாள் விசாரணையில் இருந்து வந்தது.

அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கியது. அந்த தீர்ப்பில், ராமர் கோயில் கட்ட முழு உரிமை ஒன்றிய அரசுக்கு வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

மேலும், 3 மாதங்களில் ஒன்றிய அரசு அறக்கட்டளை அமைத்து கோயில் கட்டுவதற்கான நெறிமுறைகளை வகுக்க வேண்டும். அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.

அதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு பிறகு அயோத்தி வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய அமர்வை தலைமை தாங்கிய ரஞ்சன் கோகாய் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவரை ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களவை உறுப்பினராக்கியது.

அதனைத் தொடர்ந்து அயோத்தி வழக்கின் அமர்வில் இடம்பெற்ற நீதிபதி அசோக் பூஷன் என்பவரை, 2021ஆம் ஆண்டு, அவர் நீதிபதி பதிவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில்,தற்போது, அயோத்தி வழக்கின் அமர்வில் இடம்பெற்ற மற்றொரு நீதிபதி அப்துல் நசீர் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அயோத்தி வழக்கில் பாஜகவின் கொள்கைக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு ஒன்றிய அரசு பதிவு வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தெலுங்கானா: பிறந்தநாள் விழாவுக்கு சென்ற சிறுமி..ஜூஸில் மயக்கமருந்து கொடுத்து வன்கொடுமை..5 இளைஞர்கள் கைது!