Politics

அதானியை புரட்டிப்போட்ட ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் பின்னணி என்ன ? அதன் உரிமையாளர் யார் ?

உலக பணக்காரர்களில் ஒருவரும் மோடியின் நெருங்கிய நண்பருமான அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டி 88 கேள்விகளை முன்வைத்தது.

இதன் காரணமாக அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடுமையாக சரிந்து வருகிறது. அதானி குழும நிறுவனங்கள் போலியான முறையில் தங்கள் பங்கிகளின் மதிப்பை உயர்த்தியதாக எழுந்த குற்றச்சாட்டு அந்த நிறுவனங்களின் நம்பகத்தன்மை மீது கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அதானி நிறுவனத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது. மேலும் அதானி உலக பணக்காரர் வரிசையில் 3-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கு சரிந்துள்ளார். அவரது சொத்துமதிப்பு 1.4 லட்சம் கோடி சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இத்தகைய பெரும் சரிவு ஏற்பட காரணமாக இருந்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் வேலை என்ன? அது எப்படி செயல் படுகிறது? அதன் தலைவர் யார் என்பது குறித்த தேடல் அதிகரித்துள்ளது.

ஹிண்டர்ன்பர்க் நிறுவனம்:

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பங்குச் சந்தையில் நடக்கும் ஊழல்களையும் மோசடிகளையும் ஆய்வுசெய்வதையே பிரதானமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 16க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள் குறித்த ஆய்வுகளை இந்த நிறுவனம் வெளியிட்டு உலகையே அதிரவைத்துள்ளது.

பங்குகள் பற்றிய விவரங்களை வெளியிட்டு முதலீட்டாளர்களின் பங்குகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதே தனது நோக்கம் என ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் பலமுறை கூறியுள்ளது. ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை காரணமாக இதுவரை பல்வேறு நிறுவனங்களின் பித்தலாட்டங்கள் வெளிவந்துள்ளன.

நாதன் ஆண்டர்சன் :

அமெரிக்காவை சேர்ந்த நாதன் ஆண்டர்சன் சிறுவயது முதலே பொருளாதாரம் குறித்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிக பட்டம் பெற்ற இவர், 'FactSet Research Systems Inc' நிறுவனத்தில் சிறிது காலம் பணிபுரிந்துள்ளார். மேலும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 'Hebrew University'ல் Paramedic வகுப்புக்கும் சென்றதாக கூறப்படுகிறது.

பல வங்கித் துறை மற்றும் நிதித்துறை நிறுவனங்களில் பணியாற்றிய இவர் அதன்பின்னரே பங்குச் சந்தையில் நடக்கும் ஊழல்களையும் மோசடிகளையும் ஆய்வுசெய்யும் ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

Also Read: "அவர் பணத்தை அழிக்கவில்லை, கட்டமைப்பை கட்டி எழுப்புகிறார்" -அதானிக்கு RSS அமைப்பு ஆதரவு !