Politics

குடியரசுத் தலைவருக்கு இத்தனை அதிகாரங்களா? வியக்க வைக்கும் குடியரசுத் தலைவரின் உண்மை முகம் !

இந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்தியா தனது 73-வது குடியரசுத் தினத்தை கொண்டாடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் நமது தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை இந்திய குடியரசு தலைவர் ஏற்றுவார்.

குடியரசு தினத்தன்று குடியரசு தலைவர் இந்திய படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். பின்னர், சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பதக்கங்களையும் வழங்குவார். அன்றைய தினம் குடியரசு தலைவருக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பது குறித்தும், குடியரசு தலைவரின் அதிகாரங்கள் குறித்தும் பலர் அறிந்திருக்க மாட்டோம். அவரின் அதிகாரங்கள் குறித்த பார்வைதான் இந்த கட்டுரை.

குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் !

இந்திய சுதந்திரம் பெற்றபின்னர் கூட இந்தியா பிரிட்டிஷ் வழங்கிய டொமினியன் அந்தஸ்தில்தான் செயல்பட்டு வந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் பிரநிதியாக கவர்னர் ஜெனரல் என்பவர் தான் இந்தியா அரசின் தலைமை அரசியல் தலைவராக வளம்வந்தார். அதன்பின்னர் இந்தியா 1950-ம் ஆண்டு குடியரசான பின்னர்தான் பிரிட்டிஷ் ஆதிக்கம் முழுவதுமாக ஒழிக்கப்பட்டு இந்திய அரசியலமைப்பின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் தலைவர் இந்திய அரசின் தலைமை அரசியல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவின் குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராக இருப்பதால், அவருக்கு பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவரே இந்தியாவின் முதல் குடிமகனாக விளங்குகிறார். இந்தியாவின் முப்படைகளின் தலைவராக குடியரசு தலைவர் திகழ்கிறார். மேலும், ஒரு நாட்டின் மீது போரை அறிவிக்கவும், அந்த போரை முடித்து வைக்கவும் குடியரசு தலைவருக்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மக்களவையில் பெரும்பான்மையை இழந்த அரசை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு உரியது. மக்களவையில் எந்த கட்சியும், கூட்டணியும் பெரும்பான்மை பெறாத நிலையிலும் தனது விருப்பத்தின் படி யாரையும் ஆட்சியமைக்கவும், பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிடக் கூடிய அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது. நாடாளுமன்ற அவை கூடும்போதும், கூடாத போதும் அவசர சட்டத்தை நிறைவேற்றும் உரிமையும் அவருக்கு உள்ளது.

இது தவிர நாட்டின் முக்கிய பொறுப்புகளான ஆளுநர்கள், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கே உள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் அங்கமாகவும் குடியரசுத் தலைவர் செயல்பட்டு வருகிறார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நியமன உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எந்த ஒரு மசோதாவும் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பின்னரே சட்டமாக அமலுக்கு வரும். நாடாளுமன்றத்தின் அவைகளை எந்த நேரத்திலும் கலைக்கும் உரிமையும் குடியரசு தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவை நிராகரித்து திரும்ப அனுப்பும் உரிமையும் குடியரசு தலைவருக்கு உண்டு.

இதுதவிர நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளையும் ஒருசேரக் கூட்டுவதற்கும் அவருக்கு அதிகாரம் உள்ளது. மேலும், நாட்டின் எந்த பகுதியிலும் தேவைக்கு ஏற்ப அவசரநிலையை அறிவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவசரகாலத்தின் போது சட்டப்பிரிவு 20 மற்றும் 21-ஐ தவிர மற்ற அடிப்படை உரிமைகளை அமல்படுத்துவதற்காக நீதிமன்றங்களுக்குச் செல்லும் உரிமையை குடியரசுதலைவரால் தடுத்து நிறுத்தவும் முடியும். அவசரகாலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்படும்.

இந்திய அரசின் யூனியன் பிரதேசங்களை நிர்வகிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு தனது நேரடி பிரநிதிகள் மூலம் நிர்வாகத்தை குடியரசுத் தலைவரால் கட்டுப்படுத்தவும் அதிகம் உண்டு. நிதி நெருக்கடியை அறிவிக்கவும், அத்தகைய காலங்களில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கவும் முழு அதிகாரம் குடியரசு தலைவருக்கு உண்டு. நாடாளுமன்றத்தில் நிதி மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிந்துரையின் பேரிலே அமல்படுத்தமுடியும். நீதித்துறையின் தலைவராக இருப்பதால் குற்றங்களை நிறுத்திவைக்கவோ, குற்றவாளியை விடுவிக்கவோ,மன்னிக்கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது போன்ற பல்வேறு அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு குடியரசுத் தலைவர் கட்டுப்பட்டு செயல்படுமாறு அரசியலமைப்பு சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தால் குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்ய முடியும். இதன் காரணமாக உண்மையான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. தனது அதிகாரங்களில் பலவற்றை அரிதாகவே குடியரசுத் தலைவர் பயன்படுத்துவதால் அவரின் முழு அதிகாரம் குறித்த பொதுமக்களுக்கு குறைவாகவே தெரியவருகிறது.

Also Read: குடியரசு நாடுகளுக்கும் பிறநாடுகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஒரு நாட்டுக்கு குடியரசு ஏன் முக்கியம் ?