Politics

“இந்தியாவில் ஏழை - பணக்காரர் இடையிலான இடைவெளி அதிகரித்துவிட்டது” : மோடி அரசை வெளுத்து வாங்கிய காங்கிரஸ்!

இந்தியாவின் 40% செல்வத்தை வெறும் 1% மெகா கோடீஸ்வரர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். மக்கள்தொகையில் பாதி பேர், நாட்டின் மொத்த செல்வத்தில் வெறும் 3 சதவீதத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கின்றனர். இந்தியாவில் மெகா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளில் 102இல் இருந்து 166 ஆக உயர்ந்துள்ளது என ஆக்ஸ்பாம் அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மாமன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில், இந்தியாவின் சமத்துவமின்மையை விவரிக்கும் ‘பணக்காரர்களின் வாழ்க்கை’ (Survival of the Richest) என்ற தலைப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

ஆக்ஸ்பாம் என்பது உலகளாவிய வறுமையை ஒழிப்பதற்காக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு ஆகும். அதன் அறிக்கையில், “கொரோனா தொடங்கியதில் இருந்து, கடந்த நவம்பர் மாதம் வரை பில்லியனர்களின் சொத்து மதிப்பு 121 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் அவர்களின் சொத்து மதிப்பு ரூ.3608 கோடி அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் அவர்களிடமிருந்து அரசு பெற்ற ஜி.எஸ்.டி என்பது மிகச் சொற்பமே. 2021-22 ஆம் ஆண்டில், ஒன்றிய அரசுக்கு ஜி.எஸ்.டி மூலம் ரூ.14.83 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில், முதல் 10 சதவீத பணக்காரர்களின் பங்கு வெறும் மூன்று சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 50 சதவீத மக்கள்தான் 64 சதவீத வரியை செலுத்தி உள்ளனர்.

இந்தியாவின் 100 மெகா பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ.54.12 லட்சம் கோடி. இது ஒன்றரை ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டுக்கு சமம். கெளதம் அதானியின் 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான சொத்துக்கள் மீது ஒருமுறை வரி விதித்தால், ரூ.1.79 லட்சம் கோடியை திரட்ட முடியும். ஆண் டுக்கு 50 லட்சம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை பணியமர்த்த இந்த தொகை போதுமானது என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மோடி அரசை கடுமையாக விமர்சித்த மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், மோடி ஆட்சியில் ஏழை - பணக்காரர் இடையிலான இடைவெளி அதிகரித்துவிட்டது. இந்திய ஒற்றுமை பயணம் பொருளாதார ஏற்றத்தாழ்வை நிரப்பக்கூடிய இயக்கம் எனத் தெரிவித்துள்ளார்.