Politics

R.N. ரவி என்பதைவிட R.S.S. ரவி என்பதே சரியாக இருக்கும் -தமிழ்நாடு ஆளுநரை காட்டமாக விமர்சித்த திருமாவளவன் !

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் நிகழ்வு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி பேசுகையில், தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் எனவும், 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளால் தமிழக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

அவரின் இந்த கருத்து தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் என பலதரப்பில் இருந்து ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ட்விட்டரில் 'தமிழ்நாடு' என்ற ஹஸ்டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு ஆளுநரின் இந்த பேச்சை கண்டித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும், பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்களும் ஆளுநரின் இந்த பேச்சை கண்டித்து வருகின்றனர். எழுத்தாளர் பா.ராகவன் கூட "எழுதும்போது தேவைப்படும் இடத்தில் தமிழகம், தமிழ்நாடு என்று அந்தந்தக் கணத்தில் எது தோன்றுகிறதோ அதைப் பயன்படுத்தி வந்தேன். அது தவறு என்று சுட்டிக்காட்டிய ஆளுநருக்கு நன்றி. இனி எங்கும் எதிலும் தமிழ்நாடு என்று மட்டுமே எழுதுவேன்" என ஆளுநரின் கருத்தை எதிர்த்து பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற எம்.பியுமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளுநரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார். அவர் தனது பதிவில், "தமிழகமா?தமிழ்நாடா? இது குதர்க்கவாதம்.ஆர்.என்.ரவி என்பதைவிடஆர்.எஸ்.எஸ்.ரவி என்பதே சரியாக இருக்கும். சனநாயகத்துக்கானஆளுநர் என்பதைவிட சனாதனத்துக்கான ஆளிவர் என்பதே சரியாக இருக்கும்.அரசமைப்பு சட்டத்துக்கான பிரதிநிதி என்பதைவிட சங்பரிவார்களுக்கான அரசியல்வாதி என்பதே சரியாக இருக்கும்" என காட்டமாக பதிலளித்துள்ளார்.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களை ஆளுநர் போன்ற நாட்டின் முக்கிய பொறுப்பில் அமர்த்தி வருகிறது. அவர்களும் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்துக்கு உண்மையாக இருக்கலாம் மக்களை பிறப்பில் இருந்தே பிரித்து வைக்கும் சனாதனத்துக்கு உண்மையாக இருந்து அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான தொடர்ந்து பேசி வருவது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “மொழியைக் காப்பாற்ற உயிரைக் கொடுத்த இனம்தான் நம் தமிழ் இனம்” : இலக்கியத் திருவிழாவில் முதல்வர் பேச்சு!