Politics

ஒக்கி புயல்.. முதுகெலும்பில்லாத பழனிசாமி அரசையும்,பாரபட்சம் காட்டிய ஒன்றிய அரசையும் மறந்து விட முடியுமா?

2017ம் ஆண்டின் டிசம்பர் முதல் வாரத்தை சுலபமாக எவரும் மறந்துவிட முடியாது.

ஒக்கி புயல்!

நவம்பர் 30ம் தேதி Tamilnadu Weatherman முகநூலாளர் பிரதீப் ஜான் பதிவிடுகிறார், 'புயல் உருவாகிவிட்டது. இவர்கள் ஏன் அறிவிக்க மறுக்கிறார்கள்' என. ஆயிரக்கணக்கில் மீனவர்கள் காணவில்லை என செய்தி வெளியாகிறது. துயரத்துடன் நாட்கள் செல்ல, திடீரென ஒரு நாள் இரவு 'லட்சத்தீவில் 900 மீனவர்கள் பத்திரம்' என செய்தி. 'அப்பாடா' என நிம்மதி ஆகும் முன், செய்தியின் பிற்பகுதி கண்ணை உறுத்துகிறது. 'மீட்கப்பட்டவர்களில் 175 பேர் தமிழக மீனவர்கள்.' அப்படியெனில் மிச்சம்? அய்யோ! தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் மீனவர்கள் சென்று சேந்திருப்பதாக ஒரு செய்தி. அதில் நூறு பேர்தான் தமிழர்கள். மிச்சம்? அந்த இரவும் தூக்கம் இழந்தது.

தொடர்ந்த நாட்களில் கேரளா தேடலை முடுக்கி விடுகிறது. இழப்பீடு தொகை லட்சங்களில் அறிவிக்கிறது. ஒன்றிய அரசை நெருக்குகிறது. இங்கு பொன்னார் ஈராக் பறக்கிறார். எடப்பாடி தேர்தல் பிரச்சாரத்துக்கு தயாராகிறார். நிர்மலா சீதாராமன், 'அவனுங்களை தேடணும்' என்கிறார்.

எத்தனை தாய்கள், எத்தனை மனைவிகள், மகள்கள், மகன்கள்?

பிழைத்து வந்த ஒரு மீனவர் சொல்கிறார், "நாங்க நடுக்கடலுக்கு போனபோது பயங்கரமா காத்து வீசுச்சு. கடல் கொந்தளிச்சிக்கிட்டு இருந்தது. கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் சொன்னோம். ஆனா, யாரும் பொருட்படுத்தல. எப்படியாவது வந்துடுவாங்கன்னு நம்புனோம். திடீர்னு பெரிசா ஒரு அலை வந்து அடிச்சு படக கவுத்திடுச்சு. நாலு பேரு கொந்தளிப்புக்கு நடுவுல படக புடிச்சிக்கிட்டோம். எங்க கண்ணு முன்னாடியே நாலு பேருல ஒருத்தன் செத்து கடல்ல போயிட்டான். அழக்கூட முடியல. கை வலிக்குது. உடம்பு உறையுது. ஒரு ராத்திரி முழுக்க கடல்ல, படக புடிச்சு மெதந்துக்கிட்டே இருந்தோம்!"

ஒக்கி புயலில் தமிழ் மீனவர்களுக்கு ஒன்றிய அரசு காட்டிய பாரபட்சத்தை வெறும் அலட்சியமாக கடந்துவிட முடியாது. அது பச்சை படுகொலை. ஒன்றிய அரசுக்கு தமிழ் மீனவர்கள் எப்போதுமே பிரச்சினை. காலணிக்கு உள்ளே மாட்டிய கல்!

இந்தியாவில் எல்லை மாநிலங்கள் அனைத்துக்கும் இதுதான் கதி. தன் எல்லையை ஒன்றிய அரசு பன்னாடுகளுக்கு திறந்துவிட, சுரண்ட கொடுக்க நாம் தடையாக இருக்கிறோம். இந்தியப்பெருங்கடல் இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் அள்ள அள்ள குறையாத பணம். பெரும் வாணிப வாய்ப்பு. அதற்கு தடையாக இருப்பவர்கள் நாம். மீனவர்களுக்கு நேர்ந்தது நமக்கும் நேரும்.

ஒக்கி புயல் தமிழ்நாட்டையும் பாதிக்கவில்லை. கேரளத்தையும் பாதித்தது. ஆனால் கேரளாவிலிருந்து இடது ஜனநாயக முன்னணி அரசு வேகமாக இயங்கியது. பிணராயி விஜயன் கேரள மீனவர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டு மீனவர்களையும் மீட்டு வந்தளித்தார். ஆனால் தமிழ்நாட்டில் முதுகெலும்பற்ற அரசு வீற்றிருந்தது. நிர்மலாவின் எகத்தாளத்தை அது நமக்களித்துக் கொண்டிருந்தது.

ஒக்கி புயல் வெறும் இயற்கைப் பேரிடர் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு எதிராக ஒன்றிய அரசு கடைபிடித்து வரும் விரோத மனப்பான்மைக்கான அடையாளமும் கூட

ஒக்கி புயலை மறந்துவிடக் கூடாது. மறந்துவிட்டால், நாம் அனைவருமே ஒருநாள், அவர்கள் தேடும் 'அவனுங்க'ளாவோம்!

Also Read: புயலில் காணாமல் போன கணவர்.. தேடி அலைந்த மனைவி.. களத்தில் இறங்கி மீட்டுக்கொடுத்த போலிஸார் !