Politics
”இனி ஆளுநர் பல்கலைக்கழக வேந்தர் கிடையாது ” - அவசரச் சட்டம் கொண்டுவரும் கேரள அரசு !
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதிலும், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநில ஆளுநர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் போலவே செயல்பட்டு வருகின்றனர்.
ஆளுநர்களின் இந்த ஜனநாயக விரோதப் போக்குக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய நிலையில் கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பான விஷயங்களில் ஆளுநரின் செயல்பாடு காரணமாக மாநில அரசுடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டை போல கேரளத்திலும் துணை வேந்தர்களை நியமிப்பதில் கவர்னரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு கேரளா ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார்.
இந்த பரபரப்பான சூழலில் கேரளா, கண்ணூர், மகாத்மா காந்தி, காலடி சமஸ்கிருதம், அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்பட 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கவர்னர் ஆரிப் முகம்மது கான் உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த உத்தரவுக்கு ஆளும் இடதுசாரி அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், துணை வேந்தர்கள் பதவி விலகி தேவையில்லை எனவும் கூறியிருந்தது.
அதைத் தொடர்ந்து ஆளுநரின் உத்தரவை ஏற்க 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் மறுத்துள்ளனர். மேலும் 11 பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு கேரள ஆளுநர் நோட்டீஸ் அனுப்பியிருந்த விவகாரத்தில் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் விசாரணை முடியும் வரை எடுக்கக்கூடாது என அம்மாநில உயர்நீதிமன்றம் ஆளுநருக்கு அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் கேரள மாநிலத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் ஆளுநரை அப்பதவியில் இருந்து நீக்க அவசரச் சட்டம் கொண்டு வர பினராயி விஜயன் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து கூறுகையில் , "இந்த அவசர சட்டத்தின்படி கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் ஆளுநராக ஒருவர் இருக்கமாட்டார். மாறாக பல நிபுணர்கள் கொண்ட குழு இருக்கும். இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் தனது கடமையை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.
இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஆளுநர் ஆரிஃப் கான், ”இந்த மசோதா என்னை பற்றி இருப்பதால் இதன் மீது நான் முடிவெடுக்க முடியாது. எனவே நான் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!