Politics

“தமிழ்வசையாக ஆனது எதற்காக? தலையை நுழைப்பேன் என்பது பொறுப்புக்கு ஏற்றது அல்ல”: தமிழிசைக்கு சிலந்தி பதிலடி!

தெலங்கானா ஆளுநர் - புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்னும் பல உயரங்களை அடைய விரும்புகிறார். அடையட்டும். தமிழக பா.ஜ.க. தலைவர் ஆகலாம் என்று நினைக்கலாம். அல்லது நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு ஒன்றிய அமைச்சர் ஆகலாம் என்றும் நினைக்கலாம். அவரது ஆசை. அது பேராசையாகவும். நிராசையாவதும் அவரது எச்சத்தால் காணப்படும்.

ஆனால், தி.மு.க.வையும், 'வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தையும் இழிவுபடுத்துவதன் மூலமாகப் பெயர் அடைய தமிழிசை நினைப்பது தான் அருவெறுப்பானது. தமிழ் இலக்கியம் படித்த தமிழிசையை தரங்கெட்ட அளவுக்கு தரைமட்டத்துக்கு அவரது அரசியல் மோகம் பாழ்படுத்திவிட்டது என்பதை அவரது பேச்சுகள் மூலமாகத் தெரிகிறது.

வீட்டில் தெலுங்கு பேசிக் கொண்டு தமிழ் வேடம் போடுகிறது என்று தலைவர் குடும்பத்தை மறைமுகமாக தமிழ்வசை பாடியிருக்கிறார். யார் தெலுங்கில் பேசுகிறார்கள் என்று அவரால் நிரூபிக்க முடியுமா? 'நான் விரைவில் தெலுங்கில் பேசுவேன்' என்று தெலுங்கானாவில் ஆளுநராக பதவியேற்கும் போது 'மாட்லாடியது' மறந்து போச்சா?

தமிழிசையின் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியவர் தமிழினத் தலைவர் கலைஞர். தமிழிலா - தெலுங்கிலா எதில் வாழ்த்தீனார் கலைஞர்? 'கலித்தொகை' பாட்டில் ஆண்மான் பெண்மான் கதையைச் சொன்னாரே கலைஞர்? ஆனால் ஒரு காலத்தில் தமிழிசை 'பொய்மான்' ஆவார் என்று பாவம் கலைஞர் நினைக்கவில்லை!

ஆகஸ்ட் 19 ஆம் தேதி கோபாலபுரம் கலைஞர் இல்லத்துக்கு முன்பு உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்திருந்தார் தமிழிசை. அரை நூற்றாண்டு காலத் தமிழகத்தின் தமிழினத்தின் தாய் வீடாம் கலைஞர் இல்லத்துக்குள் வந்தார். செல்வி அவர்கள் தமிழிசையை அன்போடு அழைத்துச் சென்றாரே... தெலுங்கிலா... வரவேற்றார்? உள்ளத்தால் பொய் சொல்லி வாழ்ந்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை எத்தனையோ தமிழ்ப்பாட்டுகள் சொல்லி இருக்கிறது.

கலைஞர் அவர்கள் மறைவுற்றபோது மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்திவிட்டு, 'வானமே மங்கி இருக்கிறது. ஏனென்றால் ஒரு தமிழ்ச் சூரியன் மறைந்திருக்கிறது' என்று சொன்ன தமிழிசை இன்று தமிழ்வசையாக ஆனது எதற்காக? எதற்காக? பா.ஜ.க. தலைமை அவருக்கு ஒரு பொறுப்பை வழங்கி இருக்கிறது.

தெலங்கானா ஆளுநர். கூடுதலாக புதுவை துணை நிலை ஆளுநர். அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கும் மாநில அரசுகளின் மாண்புகளுக்கும் கட்டுப்பட்டு அவர் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். தெலங்கானாவில் அவருக்கும் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவுக்கும் பிரச்சினை இருக்கலாம். அதனால் அங்கு அவருக்கு இருக்க முடியாமல் போகலாம்.

புதுவையை தனது தகுதிக்கு சிறிய மாநிலமாக நினைக்கலாம். அதனால் அங்கும் இருக்கப்பிடிக்காமல் இருக்கலாம். அவை பிடிக்கவில்லை என்றால் பதவி விலகி விட்டு தமிழ்நாட்டுக்கு வந்து அரசியல் நடத்தலாம். அதை விட்டு விட்டு வேற்று மாநில ஆளுநராக இருந்து கொண்டு இங்கு அரசியல் நடத்தக் கூடாது. இது அவர் வகிக்கும் பதவிக்குரிய பணிகள் அல்ல.

Shamsher Singh v. State of Punjab" (1975) என்ற வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், “The constitutional conclusion is that the Governor is but a shorthand expres sion for the State Government and the President is an abbreviation for the Central Government." TOOTDI சொன்னது. அதாவது தெலங்கானா, புதுவை மாநிலத்தின் சுருக்கெழுத்தாளர், இங்கு வந்து தலையை நுழைப்பேன் என்பது ஏற்ற பொறுப்புக்கே ஏற்றது அல்ல.

தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி தனது நிர்வாக வரம்புகளை மீறி அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தும் கருத்துக்களைச் சொல்லி வருகிறார். இதற்கு தி.மு.க.வும் “முரசொலியும் வலுவான விளக்கத்தைச் சொல்லி வருகிறது. இதற்குள் எதற்காக தமிழிசை தலையை நுழைக்க வேண்டும்? தமிழக ஆளுநருக்கும் இவர் shorthand expression ஆக நினைக்கிறாரா?

Also Read: "இங்கே உங்கள் மிரட்டல் பருப்புகள் வேகாது".. தமிழிசை சவுந்தரராஜனுக்கு தரமான பதிலடி கொடுத்த சிலந்தி!