Politics

அரசு உத்தரவை மதிக்காத சசிகலா புஷ்பா : வீட்டில் இருந்த பொருட்களை தூக்கி வெளியே எறிந்த டெல்லி அதிகாரிகள் !

பா.ஜ.க துணைத்தலைவராக இருக்கும் சசிகலா புஷ்பா, முன்னர் அதிமுகவில் இருந்துள்ளார். கடந்த 2011-2014 ஆம் ஆண்டுகளில் தூத்துக்குடி மாநகராட்சியில் அ.தி.மு.க சார்பில் மேயராக இருந்த இவர், அதிமுகவில் மிகவும் பிரபலமான அரசியல் தலைவராக இருந்தார்.

அந்த கட்சியின் தலைமையுடன் நெருக்கமாக இருந்த இவருக்கு, 2014ஆம் ஆண்டு மாநிலங்களவை எம்.பி சீட் ஒன்று காலியான போது, அதை சசிகலா புஷ்பாவிற்கு கொடுத்தார் அ ப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ஆனால் அந்த கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்னை காரணமாக இவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து தனது பதவி காலம் முடிந்த பிறகு அமைதியாக காத்திருந்த இவர், கடந்த 2020-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அவருக்கு செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. தற்போது இவர் பாஜகவின் துணைத்தலைவராக உள்ளார். இவர் பாஜகவில் இணைந்ததையடுத்து இவர் மீதுள்ள சர்ச்சைகள் மேலும் வலுவானது.

அண்மையில் கூட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவரை, அவர் சார்ந்த பாஜகவினர் ஒருவரே பொதுவெளியில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இவர் எம்.பி-யாக இருந்தபோது அரசு சார்பில் டெல்லியில் வீடு ஒன்று வழங்கப்பட்டது. அவரது பதவி காலம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர் இருந்த அரசு வீட்டை காலி செய்யுமாறு ஒன்றிய அரசு சார்பில் பல்வேறு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டது. இருப்பினும் அவர் காலி செய்யவில்லை.

இதனால் பொறுமை இழந்த அரசு அதிகாரிகள், அவரது அரசு குடியிருப்புக்குள் சென்று அவரது வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் வெளியே வைத்து விட்டு சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read: பேருந்து ஓட்டுநர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்.. என்னென்ன செய்யக்கூடாது? பட்டியல் இதோ !