Politics

"முதலில் பிரதமரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள்" -பாஜகவுக்கு டெல்லி துணை முதல்வர் பதிலடி !

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.இங்கு முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதல்வராக மணிஷ் சிசோடியாவும் இருந்து வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சி பாஜக மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமரிசித்து வருகிறது.

இதனிடையே டெல்லி அரசின் மதுபான கொள்கையில் ஊழல் முறைகேடு என குற்றம்சாட்டி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அதன் பின்னர் அவருக்கு சொந்தமான 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் மணீஷ் சிசோடியா வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு வருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் இதுபோன்ற சம்பவங்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தமது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவை விமர்சித்து பதிவிட்டிருந்தார். "ஆம் ஆத்மியை இரண்டாக பிளவுபடுத்தி பாஜகவில் இணைய வேண்டும், அப்படி செய்தால் அனைத்து வழக்குகளையும் முடித்து விடுகிறோம் என்று கூறினார், ஆனால் நான் என் தலையை நானே வெட்டிக் கொண்டாலும் வெட்டிக் கொள்வேனே தவிர எவர் முன்பாகவும் தலைகுனிந்து நிற்க மாட்டேன்" என காட்டமாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், மேற்கு தில்லியைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி பர்வேஷ் வர்மா என்பவர் "சிபிஐ அதிகாரி யாராவது சிசோடியாவை பாஜக-வில் சேரக் கூறியிருந்தால், அவர் அந்த அதிகாரியின் பெயரைச் சொல்ல வேண்டும். அவரால் முடியாவிட்டால், சி.பி.ஐ அதிகாரிகள் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக பதவி விலக வேண்டும். அவர் நேர்மையான தலைவராக இருந்தால் அவர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.

அவரின் இந்த கருத்துக்கு மணீஷ் சிசோடியா காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பதிலளித்த அவர் "நாட்டில் மிகப் பெரிய பொய்யர் என்று அழைக்கப்படும் அரசியல்வாதி என்றால் அது பிரதமர் மோடிதான். அவரிடம் போதைப்பொருள் சோதனை, சிபிஐ மற்றும் அமலாக்க அமைப்பு நடுநிலையான அமைப்புகளா என்று சொல்லச் சொல்லி பொய் கண்டறியும் சோதனை நடத்துவீர்களா?" எனக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இனி பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் சிக்கல்.. அமலுக்கு வந்த புதிய போக்குவரத்து விதி என்ன தெரியுமா?