Politics

வெட்கக்கேடு.. “இலங்கையை விட மோசமாக நிலையில் இந்தியா - மோடி அரசு வெட்கப்பட வேண்டும்” : தீக்கதிர் சாடல்!

இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பல்வேறு, மாயத்தோற்றங்களை ஏற்படுத்த முயல்கின்றனர். இந்நிலையில் , நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடுள்ளோர் எண்ணிக்கை 22.4 கோடியாக உள்ளது. அதற்காக ஒன்றிய அரசு வெட்கப்பட வேண்டுமென ‘தீக்கதிர்’ நாளேடு 18.10.2022 தேதியிட்ட இதழில் “வெட்கக் கேடு!” என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அது வருமாறு:-

இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து பிரதமர் மோடியும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பல்வேறு மாயத்தோற்றங்களை ஏற்படுத்த முயல்கின்றனர். பா.ஜ.க-வின் அடிப்பொடிகளோ இந்தியப் பொருளா தாரம் உலகப் பொருளாதாரத்தை மிஞ்சிவிட்டது என்று டமாரம் அடிக்கின்றனர்.

நிர்மலா சீதாராமன்

ஆனால், சர்வதேச அளவிலான பல்வேறு ஆய்வு முடிவுகள் மோடியின் ஆட்சியில் இந்திய மக்களின் பொருளாதாரம் எந்தளவிற்கு மோச மாகியுள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சன் வேர்ல்டுவைல்டு அமைப்பும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹீல்ப் அமைப்பும் இணைந்து குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் என்ற தலைப் பில் உலக நாடுகளின் பட்டினி குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இதில் உலக அளவிலான பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பட்டியலில் நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளை விட இந்தியா பின்தங்கிய நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 121 நாடுகள் அடங்கிய பட்டியலில் 2022 ஆம் ஆண்டில் இந்தியா 107 ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 101 ஆவது இடத்தில் நம்முடைய நாடு இருந்துள்ளது.

ஐந்து வயதிற்கும் குறைந்த குழந்தைகளின் சத்துணவுக் குறைபாடு, குழந்தைகளின் உயிரிழப்பு, ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளிட்ட அளவீடுகளைக் கொண்டு பட்டினி கணக்கிடப்படுகிறது. இந்தப் பட்டியலில் இந்தியாவை கிட்டத்தட்ட கடைசி இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருப்பதுதான் மோடி அரசின் எட்டாண்டு கால சாதனை.

வழக்கம்போல, இந்த அளவீடு தவறானது என்று ஒன்றிய அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். சர்வதேச சதி என்று பா.ஜ.க-வினர் அலறுகின்றனர். இந்திய மக்களின், குறிப்பாக, குழந்தைகளின் வறுமையை வெளிநாட்டு ஆய்வுகள் மூலமாகத்தான் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அவசியம் மக்களுக்கு இல்லை. சரிந்து கொண்டே இருக்கும் மக்களின் வாழ்வாதாரமே இதற்குத் தகுந்த சாட்சியமாகும்.

பட்டினிப் பட்டாள பட்டியலில் இந்தியாவை கடைசி இடத்திற்கு தள்ளிவிட்டு அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளிகளுக்கு சேவை செய்கிறது மோடி அரசு. அதானி உலகப் பணக்காரர் வரிசையில் உயர்ந்து கொண்டே போகிறார். அம்பானி அவரோடு போட்டி போடுகிறார்.

ஆனால் பெரும்பகுதி இந்திய மக்கள் வறுமையில் வாடுகின்றனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையை விட இந்திய நிலைமை மோசமாக இருப்பது பெருமைக்குரிய ஒன்றல்ல. நாட்டில் 22.4 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களாக இருக்கிறார்கள். இதற்காக ஒன்றிய அரசு வெட்கப்பட வேண்டும்.

Also Read: “பட்டினி குறியீட்டில் மிகமோசமான இடத்தில் இந்தியா.. பியூஸ் பிடுங்கப்பட்டு கிடக்கும் மோடி ஆட்சி” : முரசொலி!