Politics

GST வரியால் விவசாயிகள் நிலை மோசமடைந்துள்ளது"-மோடி அரசை கண்டித்து போராட்டத்தில் குதித்த RSS விவசாய சங்கம்!

மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லா பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது.

தற்போது இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், அரசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த முடிவிற்குக் காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன. பொருளாதார அறிஞர்களும் ஒன்றிய அரசின் தவறான ஜி.எஸ்.டி கொள்கையை விமர்சித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி பாஜகவுக்குள்ளும் இந்த வரிமுறைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பா.ஜ.க எம்.பி வருண் காந்தி உள்ளிட்டோர் ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மக்களை நாம் காயப்படுத்துகிறோம் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில், ஜி.எஸ்.டி வரி விதிப்பை ஆர்எஸ்எஸ் தொடர்புடைய வேளாண் அமைப்பும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

பிரதமரின் விவசாய திட்டத்தின் கீழ் நிதி உதவியை அதிகரிப்பது, விவசாய உபகரணங்கள் மற்றும் உரங்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை நீக்குவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் டிசம்பர் 19 அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்த பாரதிய கிசான் சங்கம் (பிகேஎஸ்) விவசாயிகளின் கண்டனப் பேரணியை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய அச்சங்கத்தின் இந்திய செயலாளர் கே சாய் ரெட்டி கூறுகையில், "விவசாயத்தில் உள்ள இடுபொருட்களின் விலை உயர்வால் நாட்டில் விவசாயிகளின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. விவசாயிகள் பல்வேறு விவசாய உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி செலுத்தி வருகின்றனர். உற்பத்தியாளர்களாக இருந்தும் அவர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை. எனவே அரசாங்கம் ஜிஎஸ்டியில் உள்ளீட்டு பங்கை பூஜ்ஜியமாகக் குறைக்க வேண்டும், அல்லது அவர்களின் உற்பத்திக்கு லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்," என்று கூறியுள்ளார்.

Also Read: 2,500 பேர் திடீர் பணிநீக்கம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..BYJU'S நிறுவனத்தின் அதிரடி முடிவின் பின்னணி என்ன?