Politics

கல்லூரிகள், ஒன்றிய அரசின் பணி,போட்டி தேர்வுகளில் இந்தி கட்டாயம்! அமித்ஷா குழுவின் அறிக்கையால் அதிர்ச்சி!

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.

இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில் பிற மாநில அமைச்சர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலம் தெரிந்த அமைச்சர்கள் கூட இந்தியில் பதில் சொல்வதும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கல்வியில் இந்தி, ரயில்வே துறையில் இந்தி என எங்கும் இந்தி, எதிலும் இந்தி என்ற கொள்கையை ஒன்றிய அரசு பின்பற்றுவது பிற மாநில மக்கள் இடையே மொழி ரீதியான அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இரு தினங்களுக்கு முன்னர் பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இதற்கு திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக ஹிந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

மேலும், கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக கட்டாயம் இந்தி இடம்பெறவேண்டும்.கல்லூரிகளில் ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை கொண்டு வர வேண்டும்.போட்டி தேர்வுகளில் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள்கள் நிறுத்தப்பட வேண்டும். போட்டி தேர்வுகளில் இந்தியை கட்டாய மொழியாக்க வேண்டும்.இந்தியில் பணிபுரியாத அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்.ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வில் தேர்வாளர்கள் இந்தி அறிவை உறுதி செய்ய வேண்டும்." போன்ற பல்வேறு பரிந்துரைகளும் அதில் இடம்பெற்றுள்ளது. ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: "அகில இந்திய அரசியலில் முக்கியமான சக்தியாக நாம் திகழ வேண்டும்".. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!