Politics

“அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி” - சிறந்த சிந்தனையாளர்களின் பட்டியலில் முதல்வர் கட்டுரை: Hindustan Times!

இந்திய சுதந்திரத்தின் 100-வது ஆண்டு விழா 2047-ஆம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான வழிகாட்டுதல்கள் குறித்து இந்தியாவின் சிறந்த சிந்தனையாளர்களின் கட்டுரைகளை ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு வெளியிட்டு வருகிறது.

அந்த வரிசையில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் மாநிலங்களின் தொலைநோக்கு திட்டம் என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கட்டுரையை ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

அதில், 100-வது சுதந்திர தினத்தை நோக்கிய 25 ஆண்டுகால பயணத்தில், மாநிலங்கள் முன்மாதிரியான, முற்போக்கான, மதச்சார்பற்ற மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாய வளர்ச்சிக்கான திட்டங்களுடன் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக மாநிலங்கள் குறிப்பிட்ட துறைகளில் கவனம் செலுத்துவதுடன், அவற்றின் முன்னுரிமைகள் மற்றும் செயல் திட்டங்களை நன்கு உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த கிராமப்புற நிர்வாகங்கள் மூலம் விவசாய உற்பத்தியை பெருக்குவதுடன், அதனை நிலையானதாக மாற்ற வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மனித மேம்பாடு வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதற்காக மக்களுக்கு சிறந்த சுகாதாரத்தை அளிப்பதுடன், அனைத்து குழந்தைகளும் பள்ளிகளுக்கு வருவதை உறுதி செய்வதும், மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதை உறுதி செய்வதும் மிகவும் அவசியம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இவை அனைத்தும் கூடுதல் கவனத்திற்குரியவை என வலியுறுத்தி உள்ள அவர், விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை நிறைவேற்றும் போது, சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவதை கவனத்துடன் கையாள வேண்டும் என்றும், இதற்கான முன்னோடித் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படத் தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சமூகம் மற்றும் மனித வளர்ச்சி குறியீடுகளில், வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடும் வகையில் நமது இலக்குகளை திட்டமிட வேண்டும் என்றும், இதற்காக தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களால், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர் விகிதம் 51 புள்ளி 4 சதவீதமாக உள்ளதாகவும், 2047-ஆம் ஆண்டுக்குள், இதனை 90 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஜெய் ஸ்ரீராம் என்ற குரலை அனுமதிக்கலாமா? - வாலை சுருட்டிக்கொண்டு ஓடவேண்டும்” : வெளுத்தெடுத்த திருமாவளவன்!