Politics

டெண்டர் மதிப்பை உயர்த்தி ஊழல்.. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் உறவினர் மீது கர்நாடகாவில் வழக்கு !

கர்நாடகாவில் கடந்த 2008 முதல் 2010 ஆம் ஆண்டு வரை எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது, அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு ஒப்பந்தங்களை வழங்குவதிலும், பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் வீட்டுமனைகள் வழங்கியதிலும் எடியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, இந்த புகார் குறித்து விசாரணை நடத்தக்கோரி பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆப்ரஹாம் என்பவர் லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால், லோக் ஆயுக்தா நீதிமன்றம் எடியூரப்பா உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்த அனுமதி வழங்கவில்லை.

இதனை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆபிரகாம் வழக்குத்தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், இந்த முறைகேடு குறித்து விரிவாக விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் எடியூரப்பா மகன் விஜயேந்திரா, கர்நாடகா கூட்டுறவுத்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசேகர், சசிதர் மரடி, சஞ்சய், சந்திரகாந்த் உள்ளிட்டோர் மீதும் பெங்களூரு லோக் ஆயுக்தா போலிஸார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான ரூ12 கோடி ஊழல் வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் சந்திரகாந்த் ராமலிங்கம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக எடியூரப்பாவின் பேரனுடன் ஒப்பந்ததாரர் சந்திரகாந்த் ராமலிங்கம் பேசும் ஆடியோ வெளியான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியின் மகன் மிதுனின் சகலையான சந்திரகாந்த் ராமலிங்கம் ராமலிங்கம் &கோ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் ரூ.575 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டரை ரூ.675 கோடிக்கு உயர்த்தி அதன் மூலம் ஊழல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read: "பாஜகவை எப்போதும் எதிர்ப்போம்.. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்" -மீண்டும் உறுதிப்பட கூறிய முதலமைச்சர் !