Politics

கர்நாடக உணவு துறை அமைச்சர் மாரடைப்பால் உயிரிழப்பு..8 முறை MLA-வாக இருந்தவருக்கு தலைவர்கள் இரங்கல் !

கர்நாடக மாநிலத்தின் பெல்காவி மாவட்டத்தில் உள்ள ஹுக்கேரி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் உமேஷ் கட்டி (வயது 61) . இவர் பசவராஜா பொம்மை தலைமையிலான அரசில் உணவு துறை அமைச்சர் பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில், பெங்களூரு நகரின் டாலர்ஸ் காலனி இல்லத்தில் தங்கியிருந்த அவருக்கு இரவு 10 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ஹுக்கேரி எம்.எல்.ஏ-வாக இருந்த அவரது தந்தை விஸ்வநாத் கட்டியின் அகால மரணத்திற்குப் பிறகு 1985ல் உமேஷ் கட்டி அரசியலுக்கு வந்த உமேஷ் கட்டி அந்த தொகுதியில் 8 முறை எம்.எல்.ஏ-வாக இருந்துவந்தார். மாநில பாஜகவில் முக்கிய தலைவராக வலம் வந்த அவரின் மறைவு மாநில அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பெண் சமூகத்தில் புரட்சிகளை உருவாக்க போகும் புதுமைப் பெண் திட்டம்.. பட்டொளி வீசிப் பறக்கும் திராவிட மாடல்