Politics

நவீன நீரோ.. நகரமே வெள்ளத்தில் மிதந்தநிலையில் ஜாலியாக ஊர் சுற்றிய பெங்களூரு பாஜக MP ! கொந்தளிக்கும் மக்கள்

கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பெங்களூர் மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளிப்பதுடன் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதிலும் நகரில் உள்ள சென்ட்ரல் சில்க் போர்டு சந்திப்பு முதல் கிருஷ்ணராஜபுரம் சந்திப்பு வரை சுமார் 17 கி.மீ புறநகர் வட்டச்சாலை சாலையில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அமைந்துள்ளது. இந்த பகுதி முழுவதும் தற்போது மழை நீரால் மூழ்கியுள்ளது. இப்பகுதியில் மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யாததே இந்த நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்த மழை வெள்ளம் காரணமாக ஐ.டி நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.225 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்றால் தங்களது நிறுவனத்தை வேறு இடத்துக்கு மாற்றுவோம் ஐ.டி நிறுவனங்கள் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியுள்ளன.

இது தவிர தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் அகிலா என்ற இளம்பெண் மழை வெள்ளத்தில் சென்றபோது மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். மழை வெள்ளம் மற்றும் உயிரிழப்புகள் காரணமாக அரசுக்கு எதிரான விமர்சனம் அதிகரித்தது.

இந்த நிலையில், பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பியும், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தேஜஸ்வி சூர்யா ஊர் சுற்றி விட்டு சாப்பிடும் வீடீயோவில் வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவரை விமர்சித்து வருகின்றனர். ரோம் நகரம் தீயில் எரிந்தபோது அதன் மன்னன் நீரோ பிடில் வாசித்தவிதமாக தேஜஸ்வி சூர்யாவும் நடந்து கொள்வதாக இணையத்தில் பலர் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: தொடர் கனமழையால் நிகழ்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி துடிதுடித்து இளம்பெண் பலி.. கர்நாடகாவில் சோகம் !