Politics

"உங்களை பா.ஜ.க விட்டாலும் தமிழக முதலமைச்சர் விடமாட்டார்" : EPS, OPS-ஐ எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்!

சென்னை தென்மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் மயிலாப்பூரில் நேற்று இரவு நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் த.மயிலை வேலு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். எம்.எம்.அப்துல்லா எம்.பி., கருணாநிதி எம்.எல்.ஏ ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., “இந்தியாவில் பொது மொழியாக ஆங்கிலம் இருக்கக்கூடாது இந்திதான் இருக்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இதனையடுத்து சமூக வலைதளங்களில் ‘இந்தி தெரியாது போடா’ என தி.மு.கவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். எந்த மொழிக்கும் தி.மு.க எதிரி கிடையாது. இந்தி திணிப்பை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்காக தி.மு.க தொடர்ந்து போராடும்.

இந்தி மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. இந்தி திணிப்பிற்கு மட்டுமே நாங்கள் எதிரானவர்கள். நமது முதல்வர் கேரளா சென்றபோது, கேரள முதல்வர் தமிழக முதல்வரை இந்தியாவே உற்றுநோக்கக்கூடிய ஆட்சியை செய்து வருகிறார் என பாராட்டியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்வரை நீட் தேர்வு தமிழகத்திற்கு வரவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பா.ஜ.கவுடன் சேர்ந்து நீட் தேர்வை தமிழகத்திற்கு வரவழைத்தனர். அடிமைத்தனமாக நீட் தேர்வை தமிழகத்திற்கு கொண்டு வந்து 17 பேர் உயிரிழக்க் காரணமாக இருந்துள்ளனர்.

ஜெயலலிதா மீது சொத்துகுவிப்பு வழக்கு மட்டுமே உள்ளது. ஆனால் இந்த மற்றவர்கள் மீது கொலை வழக்கு, கொள்ளை வழக்கு உள்ளது. உங்களை பா.ஜ.க விட்டாலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடமாட்டார்.” எனப் பேசினார்.

Also Read: மணிரத்னம், ராஜமௌலி இருந்த மேடையில் திரையுலகினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த முக்கிய கோரிக்கை!