Politics

ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல தடையாக இருந்தது எது? - ஓ.பி.எஸின் வாக்குமூலத்தால் பரபரப்பு!

ஜெயலலிதா மரண வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜாராகத நிலையில், 9வது முறையாக சம்மன் அனுப்பப்பட்ட பின் ஆறுமுகசாமி கமிஷன் முன் இன்று ஆஜரானார் ஓ.பன்னீர்செல்வம்.

அப்போது விசாரணை கமிஷன் முன் ஓ.பன்னீர்செல்வம் அளித்த வாக்குமூலத்தின் விவரம்:

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில் அண்ணா, எம்.ஜி.ஆரை போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரிடம் கூறினேன் என ஓ.பன்னீர்செல்வம் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

அப்போலோ மருத்துவர்களிடம் கலந்து பேசிய பிறகு வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவெடுக்கலாம் என விஜயபாஸ்கர் சொன்னதாகவும், மறுநாள் காலை அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி மருமகன் விஜயகுமார் ரெட்டியை சந்தித்து இதே கருத்தை வலியுறுத்தியதாகவும், ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், ஒரு வாரத்தில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என விஜயகுமார் ரெட்டி கூறினார் எனவும் பன்னீர்செல்வம் கூறினார்.

Also Read: ஜெ.,மரணம்: 75 நாளும் அப்போலோவில் இருந்த இளவரசி விசாரணை கமிஷனில் அளித்த வாக்குமூலத்தால் பரபரப்பு!

இதனையடுத்து, விசாரணை ஆணையத்தில் ஆஜரான முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் வெளிநாடு அழைத்து செல்வது குறித்து அமைச்சரவையை கூட்ட சொன்னதாகவும், நான்கு நாட்கள் பரபரப்பாக பேசி பின்னர் அமைதியாக இருந்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்திருந்ததை சுட்டிக்காட்டி ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், ராம் மோகன் ராவ் அது தொடர்பாக தன்னிடம் எதுவும் பேசவில்லை எனவும், அவ்வாறு கேட்டிருந்தால் உடனடியாக கையெழுத்து போட்டிருப்பேன் எனவும் பதிலளித்துள்ளார்.

மேலும், அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் ஆகியோர்கள் தான் எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: ஜெ.,மரணம்: ’எனக்கு எதுவுமே தெரியாது’ - ஓ.பி.எஸ். ; அப்போ ஏன் விசாரணை கமிஷன் கேட்டீங்க? - ஆணையம் கேள்வி!