Politics

EPS போனதும் நடு ரோட்டில் முட்டி மோதிய அதிமுகவினர்; உச்சத்தில் உட்கட்சி பூசல்; சாத்தூரில் பரபரப்பு!

உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைக்காக தென்காசிக்குச் செல்லவிருந்த அதிமுகவின் எடப்பாடி பழனிசாமிக்கு சாத்தூர் வெங்கடாசலபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி உடன் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கே.டி.ராஜேந்திர பாலாஜி உடனிருந்தனர்.

வரவேற்பு முடிந்து செல்லும் வழியில் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர் ஒருவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஒழிக என்று கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அங்கு இருந்த ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்களுக்கும் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் மோதலாக உருவெடுத்து கைகலப்பு ஏற்பட்டது.

இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். உடனடியாக காவல்துறையினர் தலையிட்டு கூட்டத்தை அதிமுகவினரை கலைத்து அனுப்பி வைத்தனர்.

ஏற்கெனவே ராஜேந்திர பாலாஜிக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ராஜவர்மனுக்கும் தகராறு இருந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவினர் ஆங்காங்கே குழுவாக பிரிந்து கிடக்கிறார்கள். இதனால் அதிமுகவின் உட்கட்சி பூசால் தொடர்ந்து பூதாகரமாகி வருகிறது.

ஏற்கெனவே நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் படு தோல்வியை சந்தித்துள்ள அதிமுக, அதன் உட்கட்சி பூசலால் உள்ளாட்சித் தேர்தலிலும் வாஷ் அவுட் ஆகும் நிலை உண்டாகியுள்ளது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: நீட் மசோதாவால் எந்த பயனும் இல்லையா? பாரதியின் இந்த வரிகளை படிக்கலாமே! அதிமுக-பாஜகவை சாடிய முரசொலி நாளேடு!