Politics

“யோகி வந்தால் கலவரம்; மோடி வந்தால் ஐ.டி ரெய்டு; இதுவே பா.ஜ.கவின் அரசியல் கலை “ - ப.சிதம்பரம் சாடல்!

“ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் தமிழக அரசியலில் மீண்டும் தன்மானம் உயரும்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இன்று காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா என பா.ஜ.க தலைவர்கள் பலரும் கடைசி நேரத்தில் தமிழகத்திற்குப் படையெடுக்கின்றனர். அவர்கள் வருகையை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். அவர்கள் பேசப் பேச, தமிழக மக்கள் அவர்களின் உண்மை நிலையைப் புரிந்து கொள்வார்கள்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தவுடன் கலவரம் வெடிக்கிறது. மோடி வந்தவுடன் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை நடக்கிறது. இது பா.ஜ.வுக்குக் கைவந்த கலை. வருமான வரித்துறையினர் சோதனையில் பணமே கிடைக்கவில்லை என்றால் அது எவ்வளவு மோசமான நடவடிக்கை.

பா.ஜ.க, அ.தி.மு.கவினர் வீடுகளில் வருமான வரி சோதனை கிடையாது. தமிழகத்தில் அனைத்து ஐ.டி சோதனைகளும் ஒரே திசையைச் சுட்டிக்காட்டி உள்ளன.

தி.மு.க கூட்டணி 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால்தான், பாஜகவால் வெற்றியைத் திருட முடியாது. பெண்கள் நலன் பற்றிப் பேச அருகதையற்ற கட்சி பா.ஜ.க. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் பா.ஜ.கவிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டனர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் தமிழக அரசியலில் மீண்டும் தன்மானம் உயரும். தமிழகத்திற்கு 14, 15-வது நிதிக்குழு பரிந்துரைந்த தொகையில் மத்திய அரசு பாக்கி வைத்துள்ளதாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பி.எஸ் பேசுகிறார். ஆனால், மேடையில் அனைத்தும் வந்துவிட்டது என்கிறார். அப்படியென்றால் சட்டப்பேரவையில் பேசியது பொய்யா?

தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதுதான் எங்களுக்குத் தெரியும். ஆனால், பா.ஜ.க கற்றுத் தரும் பாடம் தேர்தல் திருட்டு. அது எங்களுக்குத் தெரியாது. கற்றுக்கொள்ளவும் மாட்டோம். ஏப்ரல் ஆறாம் தேதிக்குப் பிறகு போலீஸாரைக் காட்டிலும், நாங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கண்காணிப்போம்.” எனத் தெரிவித்தார்.