Politics

“பழனிசாமி அவர்களே, ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் தெரியுமா?” - பொய்களை அம்பலப்படுத்திய ஆர்.எஸ்.பாரதி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என தி.மு.க தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. தி.மு.க-வுக்கு மக்களிடையே எழுந்துள்ள பேராதரவைக் கண்டு அச்சமடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க மீது பொய்யான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் பேசும்போது, “ஜெயலலிதா விடுதலை அடைந்தபிறகு, அவர் மீது வீண்பழி சுமத்தி மேல்முறையீட்டு வழக்கு போட்டு அவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியது தி.மு.க. இதனாலேயே அவர் உரிய சிகிச்சை பெறமுடியாமல் துரதிருஷ்டவசமாக இந்த மண்ணை விட்டு மறைந்தார். இதற்கு காரணம் கலைஞரும், மு.க.ஸ்டாலினும் தான் என்பதை மக்கள் அறிவார்கள்” என அபாண்ட பழி சுமத்தினார்.

தேர்தல் தோல்வி பயத்தல நாள்தோறும் பொய்களை வாரியிறைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி, என்.ஆர்.இளங்கோ எம்.பி. ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், “அம்மையார் ஜெயலலிதாவின் மரணத்திற்குக் காரணம் தி.மு.க தலைவர் என எடப்பாடி பழனிசாமி வடிகட்டிய பொய்யைக் கூறுகிறார்.

ஜெயலலிதா மறைவுக்கு தி.மு.க-வே காரணம் என புதிதாக புளுகுமூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 1995ல் டான்சி வழக்கு தொடங்கி, உச்சநீதிமன்ற தீர்ப்பு வரை ஜெயலலிதா மீதான வழக்கை தி.மு.க சட்டரீதியாகவே கையாண்டு வந்திருக்கிறது.

நிலைமை இப்படியிருக்க, ஜெயலலிதாவின் மறைவுக்கு நாங்கள் காரணம் எனக் கூறுவது திட்டமிட்ட பொய்யாகும். ஏனெனில், ஜெயலலிதா மீதான வழக்குகளை எப்போதுமே தி.மு.க அரசியல் ரீதியாக அணுகவில்லை.

ஆனால், ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும் என கர்நாடக முதல்வரை சந்தித்து வலியுறுத்தியது இன்று அ.தி.மு.க கூட்டணியில் அடுத்த பெரிய கட்சியாக இருக்கும் பா.ம.க தான்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தலின்படி, ஜி.கே.மணி, பாலு ஆகியோர், ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்யுமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து மனு வழங்கியது குறித்த செய்திகள் மே 14, 20215ல் வெளிவந்திருக்கின்றன.

உண்மை இப்படியிருக்கும்போது, மனசாட்சியே இல்லாமல் எங்கள் மீது முதல்வர் புளுகுவது எந்த வகையில் நியாயம்? ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்யவேண்டும் என வற்புறுத்திய ராமதாஸின் கட்சியை கூட்டணியில் சேர்த்திருப்பது ஜெயலலிதாவுக்கு செய்த துரோகமா இல்லையா என்பதை அக்கட்சித் தொண்டர்களே கூறுவார்கள்.

எனவே, இதுபோன்ற பொய்களை முதல்வர் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தால், மக்கள் மன்றத்தில் வீதிவீதியாகச் சென்று இதுகுறித்து விளக்க வேண்டியிருக்கும்.

மனசாட்சி இல்லாமல் கூட்டணி வைத்துவிட்டு உண்மையை மூடிமறைப்பது எந்த வகையில் நியாயம்? ஜெயலலிதா மீதான விசாரணை ஆணையத்தின் முடிவுகள் வெளிவராதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “கிடப்பில் இருக்கும் திட்டங்களை விரிவுபடுத்துவோம்; எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்போம்”: மு.க.ஸ்டாலின் உறுதி!