Politics

“தள்ளுவண்டி டெண்டரை எடுத்த அ.தி.மு.க நிர்வாகி” : ஃபிக்ஸிங் டெண்டர் மூலம் ஊழலில் கொழிக்கும் பழனிசாமி அரசு!

சென்னை மாநகராட்சியில் டெண்டர் முறைகேடு நடப்பது தொடர்பாக அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, தொடர்ந்து நேர்மையாக டெண்டர் நடக்காமல், ஆளும் கட்சி நிர்வாகிகள் பின்புலம் மூலம் ஃபிக்சிங் டெண்டர் தான் நடக்கிறது. இ டெண்டர், எஃப் டெண்டர் என டெண்டர் அனைத்துமே அ.தி.மு.க அரசுக்கு சென்னை மாநகராட்சி கட்டிட அதிகாரிகள் வழங்கி சட்டவிரோதமாக ஃபிக்சிங் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் மெரினா கடற்கரையில் தள்ளு வண்டி வழங்குவதில் (17.2கோடி) விதிகள் மீறி டெண்டர் ஃபிக்சிங் செய்யப்பட்டுள்ளது. விதிகள் முறையாக பின்பற்றாமல், தகுதி இல்லாத நிறுவனத்தை தேர்வு செய்துள்ளனர்.

தள்ளுவண்டி வர்த்தகத்திற்கு முற்றிலும் தொடர்பே இல்லாத துணி வியாபாரம் செய்யும் அ.தி.மு.க இளைஞரணி துணைச்செயலாளர் அபிஷேக் ரெங்கசாமியின் நிறுவனத்துக்கு தர முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர், உள்ளாட்சி துறை அமைச்சர் ஆகியோர் இந்த புகார் குறித்து வெளிப்படையாக பேச வேண்டும்.

இந்த டெண்டர் விவகாரத்தில் நடைபெற்றுள்ள ஊழல் தொடர்பாக ஆதாரத்துடன் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளோம். இதில் மாநகராட்சி அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருக்கிறது. வெளிப்படையான டெண்டர் விட்டால்தான் முறைகேடுகள் எதுவும் இல்லாமல் இருக்கும்.

அனைத்து டெண்டர்களிலும் ஃபிக்சிங் செய்யப்படுகிறது. முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் தெரிந்தே இந்த டெண்டர் ஊழல் நடைபெறுகிறது. முதல்வருக்கு இந்த எஃப் டெண்டர் ஊழலில் தொடர்பு இருக்கிறது.” என சரமாரியாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

Also Read: “10 ஆண்டுகளில் விளம்பரத்துக்காகவே ரூ.100 கோடி செலவு” - மக்கள் பணத்தை வாரி இறைத்த அதிமுக அரசு!