Politics

“ஒரு கையில் கொடியும், மறு கையில் தடியும் எடுக்க வேண்டும்” - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சால் பரபரப்பு!

விருதுநகரில் அதி.மு.க.சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கட்சி இளைஞர்கள் ஒரு கையில் கொடியும் மறு கையில் தடியும் எடுக்க வேண்டும் என்று பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி சார்பில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது.

“அ.இ.அ.தி.மு.க.வில் நாம் ஏற்கனவே இளைஞர்களாகத்தான் பதவியில் உள்ளது. இப்போது பாருங்கள் மாவட்டத்தில் ஒரு புது டீம் உருவாகி விட்டது. இதை எதிர்க்கும் சக்தி யாருக்கும் கிடையாது.

விசில் சத்தம் கேட்க வேண்டும். செல்பி எடுக்க ஓட வேண்டும். ஒரு கையில் கொடி எடுக்க வேண்டும். மறு கையில் தடி எடுக்க வேண்டும். அப்போதுதான் கட்சி அங்கு வலுவாக இருக்கும். நமது கட்சி விருதுநகர் மாவட்டத்தில் வலுவாக இருக்கிறது. எடப்பாடியார் பின்னாடியும், ஓபிஎஸ் பின்னாடியும் வலுவோடும் பொலிவோடும் இருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக எஃகு கோட்டையாக இருக்கிறது.” இவ்வாறு அவர் பேசினார்.

மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சரே கையில் தடியை எடுக்குமாறு கூறியது மக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்களிடையேவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: உச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோற்பது நிச்சயம் - அ.தி.மு.க எம்.எல்.ஏ சூசகம்!