Politics

“இனி ஒருபோதும் தேசியக் கொடியை அவமதித்து பேச மாட்டேன்” - ஜாமின் கோரி மன்னிப்புக் கேட்டார் எஸ்.வி.சேகர்!

தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், மன்னிப்பு கேட்டார் பா.ஜ.க நிர்வாகி எஸ்.வி சேகர், தான் வாழ்நாள் முழுதும் இனி ஒருபோதும் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என சென்னை நீதிமன்றத்தில் உத்தரவாத மனு தாக்கல் செய்துள்ளார்.

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர், களங்கமான தேசியக் கொடியைத் தான் ஆகஸ்டு 15 ம் தேதி ஏற்றப்போகிறாரா எனவும், தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா என்கிற வகையில் வீடியோ வெளியிட்டார்.

தேசியக் கொடியை களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய பா.ஜ.க நிர்வாகி எஸ்.வி சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என எஸ்.வி சேகர் உத்தரவாதம் அளிப்பதோடு, நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்து நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கலாம் எனவும், அதே நேரத்தில் வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, எஸ் வி சேகர் சார்பில் மன்னிப்புக் கோரி வருத்தம் தெரிவித்து உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த மனுவில்,தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், பேசியதற்கும் பா.ஜ.க நிர்வாகி எஸ்.வி சேகர், தான் வாழ்நாள் முழுதும் இனி ஒருபோதும் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை எஸ் வி சேகரை கைது செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

Also Read: சித்தாவிலேயே தகுதியானவர்கள் உள்ளபோது ஆயுர்வேதம் படித்தவரை நியமித்தது ஏன்? : மோடி அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!