file image
Politics

“அரசியலில் தமக்கென தனி முத்திரையை பதித்து வருகிறார் மு.க.ஸ்டாலின்” - கே.எஸ்.அழகிரி வாழ்த்து!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் மு.க.ஸ்டாலின். மத்தியில் நடைபெற்று வரும் வகுப்புவாத பா.ஜ.க. ஆட்சியையும், மாநிலத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க.வின் அராஜக ஊழல் ஆட்சியையும் எதிர்த்துப் போராடி வரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பேரறிஞர் அண்ணா மறைவிற்குப் பிறகு தமது இறுதிக் காலம் வரை ஏறத்தாழ 50 ஆண்டுகள் தி.மு.க.வின் தலைமையை ஏற்று பல சோதனைகளை சந்தித்து சாதனை புரிந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். ஏறத்தாழ 45 ஆண்டுகாலம் அரசியல் பயிற்சி பெற்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் மறைவிற்குப் பிறகு கடந்த 2018 ஆகஸ்ட் 28 அன்று தி.மு. கழகத்தின் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தளபதி மு.க.ஸ்டாலின்.

மிகப்பெரிய ஆளுமை கொண்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் மறைவிற்குப் பிறகு தி.மு.கழகத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுகளவு சேதாரமும் இல்லாமல் கட்டுக்கோப்பாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் இயக்கத்தை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். தேசிய அளவிலும், மாநில அளவிலும் அரசியலில் தமக்கென தனி முத்திரையை பதித்து வருகிறார்.

மத்தியில் நடைபெற்று வரும் வகுப்புவாத பா.ஜ.க.வையும், மாநிலத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க.வின் அராஜக ஊழல் ஆட்சியையும் எதிர்த்துப் போராடி வருகிறார். மு.க.ஸ்டாலின் அவர்கள் தி.மு.கழகத்தின் தலைவர் மட்டுமல்ல, தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவரும் கூட. அந்தப் பணியை நாள்தோறும் அரசியல் பேராண்மையோடு நிகழ்த்தி வருகிறார். தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து வியூகம் வகுத்து செயல்படுத்தி வருகிறார். இவரது கடுமையான உழைப்பிற்கு உரிய பலனை 2021 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் பெறுகிற வாய்ப்பு கனிந்து வருகிறது.

நீண்டகால அரசியல் பின்னணியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறப்பான தலைமையை தி.மு.கழகத்திற்கு வழங்கி, மூன்றாம் ஆண்டில் காலடி வைக்கும் மு.க. ஸ்டாலின் அவர்கள் மேலும் பல வெற்றிகளை குவிக்க தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வாழ்த்துகிறேன், போற்றுகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.